* அட்டாளைச்சேனை பேராளர் எழுச்சி மாநாட்டில் ஹசன் அலி
வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்து, தமிழ் முஸ்லிம் மக்கள் பகைமையை வளர்ப்பதற்காகவே, இந்த மாகாண சபை தேர்தலை அரசாங்கம் முன் வைத்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
அட்டாளைச் சேனையில் நடைபெற்ற ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்எழுச்சி மாநாடு, அண்மையில் திகாமடுல்ல ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் மூவின மக்கள் மத்தியில் இன ஒற்றுமையின் அவசியத்தை அவர் ஆற்றிய உரையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
விஜித ஹாமதுரு என்ற ஒரு பௌத்த துறவி பெருந்தேசிய சமூகத்திலிருந்து இந்த ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மகாநாட்டில் கலந்து கொள்வது அக்கறைக்குரிய விடயமாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் சகோதரர்களின் ஒற்றுமையை அவர் பறைசாற்றுகிறார். இந்த பௌத்த துறவி தலைவர் அஷ்ரப் காலத்தில் இனங்களின் ஒற்றுமைக்காகவும், சமாதான நீரோட்டத்திற்காகவும் காத்திரமான பங்களிப்பு செய்தவர்.
1986 இல் ஒரு பிரதேசசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் கிழக்கில் நடாத்த திட்டமிட்டது. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அந்தத் தேர்தலில் களமிறங்கியது. ஆயினும் இத்தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்ற பிரச்சினையும் எழுந்தது. இதற்கு பிரதான காரணம் அச்சுறுத்தல்களாகும். அந்த அச்சுறுத்தல்களையும் மீறி இந்த அட்டாளைச்சேனை மண்ணில் இறுதியான முடிவை எடுத்து தேர்தலில் நின்றோம். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனுத்தாக்கல் செய்து ஒரு வாரத்தின் பின்னர் மரண தண்டனைக் கடிதம் எங்களுக்கு அனுப்பியிருந்தார்கள். புலிகள் அனுப்பிய அந்தக் கடிதத்தை இதுவரை சான்றாக வைத்துள்ளோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் எங்களைக் கொழும்புக்கு வருமாறு தலைவர் அஷ்ரப் அழைத்திருந்தார். கொழும்பு மருதானை வை.எம்.எம்.ஏ.கட்டிடத்தில் நாங்கள் தங்கினோம். தலைவர் அஷ்ரப் மஃரிப் தொழுகையின் பின் வந்து எங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார். மரணிப்பதற்குத் தயாராக இருப்பவர்கள் இங்கே இருங்கள். மற்றவர்கள் எழும்பிச் செல்லுங்கள் என்றார். சிலர் உடனே சென்றுவிட்டார்கள். அப்படி எழுந்து சென்றவர்களில் ஒருவர்தான் ஹிஸ்புல்லா. சகோதரர் ஹிஸ்புல்லாவின் அரசியல் சரித்திரம் இப்படித்தான் ஆரம்பமானது. அதிஷ்ர்டவசமாக அந்தப் பிரதேசசபைத் தேர்தல் அப்போது நடைபெறவில்லை.
ராஜிவ் காந்தியும் - ஜே.ஆரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி மாகாணசபைத் தேர்தல் 1988 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. சஹிதாகி விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணமாக இருந்தது. இதனால் கொழும்பில் உள்ளவர்களின் பெயரைத்தான் நாங்கள் வெளிப்படுத்தினோம்.
சமாதானத்தை கொண்டுவந்துவிட்டோம், என்று சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காகத்தான் அந்தத் தேர்தலைக் கொண்டு வந்தார்கள். தமிழ் பேசும் சகோதரர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற பொய் நாடகத்தை அரங்கேற்றுவதற்காகத்தான் அந்த மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. ராஜிவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சம்பவத்தை நாம் மறக்கமுடியாது. பெருந் தேசிய வாதம் இவ்வாறு மாறிமாறி ஆட்சிக்கு வந்தபோதும் அவர்களின் கடும்போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.
வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்து, இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்களிடையே பகையை மூட்டுவதற்காக இந்த மாகாணசபைத் தேர்தலைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது திணிக்கப்பட்ட ஒரு தேர்தல் ஆகும். 20 வருடங்களாக இந்த மண்ணிலே ஒரு முஸ்லிம் மாகாணம் வரவேண்டும் என்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காய்களை நகர்த்திய வேளையில் இந்தத் தேர்தல் வந்திருக்கிறது. இச் சம்பவத்தில் தமிழ் சகோதரர்களையும் முஸ்லிம் சகோதரர்களையும் போட்டிபோட வைத்து பகை உணர்வை ஏற்படுத்த பெருந்தேசிய இன வாதம் முயல்கிறது.
மாகாணசபையை நாங்கள் கேட்கவில்லை. ஒரு முஸ்லிம் மாகாணத்தை தந்து விட்டுத்தான் இவர்கள் கிழக்கைப் பிரித்திருக்க வேண்டும்.கிழக்கை பிரித்து விட்டு இந்த அரசாங்கம் உத்தியோக பூர்வமாக ஒரு புதிய தேசிய கொடியை வெளியிட்டது. அதில் அம்பாறை மாவட்டத்திற்கு சிங்கத்தின் தலை இலட்சினையாகவும், திருகோணமலை மாவட்டத்திற்கு கழுகு இலட்சினையாகவும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீன் இலட்சினையாகவும் அறிவிக்கப்பட்டது. பாண்டிய மன்னனின் இலட்சினையாக மீனை மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிபலிப்பதாக வெளியிட்டதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கான எங்கள் இஸ்லாமிய இலட்சினை மறுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் உரிமை மறைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை சர்வஜன வாக்கெடுப்புக்குச் சமனாகும். இந்தக் கொடியை முஸ்லிம் மக்கள் ஏற்றிக்கொண்டிருக்கிறார்களா? என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் இதுவாகும். முஸ்லிம் மாகாண சபை உருவாகுவதற்கு போராடுகின்ற எமது போராட்டம் முடிவுறுகிறதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் இதுவாகும். இந்த அரசாங்கத்தின் சதித் திட்டத்திலிருந்து தமிழ் பேசும் மக்களை காப்பாற்றத்தான் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் பதவிகளைக் தூக்கி வீசி விட்டு களம் இறங்கியிருக்கிறது. நாம் பிறந்த பூமியாகிய எமது மண்ணிலே தோன்றிய அரசியல் சக்தி தான் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். எமது மரச்சின்னத்தைக் காப்பாற்றுவதற்காக 32 வழக்குகளை எதிர் கொண்டு போராடி வென்றிருக்கின்றோம். நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் 12 உறுப்பினர்களைத்தான் பெறலாம். இது போதாது. எனவே இந்தக் கடும் போக்கு அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக ஒரு வியூகத்தை உருவாக்கியுள்ளோம்.
சர்வகட்சி மகாநாட்டு ஆலோசனையில் நாங்கள் எதிர்பார்த்த கரையோர மாவட்டத்தை வழங்க ஐ.தே.கட்சி உறுதியளித்துள்ளது. ஒரு முஸ்லிம் மாகாண சபையை வழங்குவது பற்றி கொள்கை ரீதியில் ஐ.தே.கட்சி இணங்கியுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து போட்டியிட்டால் குறைந்தது 17 ஆசனங்களைப் பெற்று மாகாண சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பெற்ற முடியும். இந்த அடிப்படையில்தான் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.