எம்.ஏ.எம்.நிலாம்
பொதுச் சொத்துக்களையும், வளங்களையும் விழுங்கும் அரசியல் முதலைகளை கடுமையாக சாடியிருக்கும் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார அரசியல்வாதிகள் தவறுகளை திருத்திக் கொள்ளத் தவறினால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாமென எச்சரித்துள்ளார்.
பிரேமதாஸ போன்ற நேர்மையான அரசியல் தலைவர்களின் தேவை நாட்டுக்கு அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 15 ஆவது சிரார்த்த தின வைபவத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
பிரேமதாஸ எமது நாட்டுக்குக் கிடைத்த உன்னதமான புருஷராவார். உழைப்பாளர்களை நேசித்தவர். உழைக்கும் வர்க்கத்தின் சேவையை நாட்டுக்கு உணர்த்திய யதார்த்தவாதி. காலத்தைப் பொன்னாக மதித்தவர். ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பாதவர். ஒரு தடவை ஊர்காவற்றுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ.இரத்தினம் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவைச் சந்தித்த நேரம் கேட்டபோது காலை 4மணிக்கு வருமாறு தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த நேரத்தில் சந்தேகம் கொண்ட இரத்தினம் எம்.பி.மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின்னேரம் 4 மணியா அதிகாலை 4 மணியா என்று கேட்டபோது அதிகாலை 4 மணிதான் என்று ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். அந்தளவுக்கு நேரத்தையும், காலத்தையும் பொன்போன்று பாதுகாத்தவர் பிரேமதாஸ. காலத்தை வீணடிப்பவர்களை அவருக்கு அறவே பிடிக்காது. நேரத்துக்குத் தன்னை அடிமைப்படுத்தாமல் அதனைத் தனக்கு அடிமைப்படுத்திக் கொண்டவர். அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபட்டவர்.
பிரேமதாஸவின் இழப்பை ஈடுசெய்யக்கூடிய ஒருவர் இன்றுவரை எமக்குக் கிடைக்கவில்லை. கிராமத்தை வளப்படுத்துவதன் மூலம் நாட்டை உயர்வடையச் செய்ய முடியுமென்ற நம்பிக்கையுடன் செயற்பட்டவர்.
இன்று எமது நாட்டின் பொதுச் சொத்துக்களையும் வளங்களையும் சில அரசியல் முதலைகள் விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். என்றோ ஒருநாள் அவர்கள் இதற்கு பிராயச்சித்தம் தேடியே ஆக நேரிடலாம். இன்றைய அரசியல் தலைவர்களிடம் நிறைய குறைபாடுகள் காணப்படுகின்றன. கடந்த காலத்தவறுகளை உணர்ந்து நாட்டுக்காக இனியாவது சிந்திக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்காக நேர்மையுடன் நாம் செயற்படத் தவறினால், எமது அடுத்த சந்ததி எமது புதைகுழிகளில் சாபமிடும் நிலைமை ஏற்படலாமெனவும் சபாநாயகர் தெரிவித்தார்.