பொகவந்தலாவையில் மேலக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக 300 ரூபா உடன், ஏனைய வருகை, விலை ஆகியவற்றிற்கான கொடுப்பனவுகள் இந்த தொகைக்கு மேலதிகமாக சேர்க்கப்படும் விதத்தில் புதிய சம்பள திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
விலைவாசி உயர்வினால் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாவும் மண்ணெண்ணெயும் மானிய விலையில் சீராக மலையகமெங்கும் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
மலையக தோட்டப்புறங்களில் அரசியல் தொழிற்சங்க செல்வாக்குகளுடன் நடத்தப்படும் கள்ளச்சாராய உற்பத்தி, விநியோகம், விற்பனை ஆகிய சமூகவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு கள்ளச்சாராய கலாசாரம் மலையகத்திலிருந்து துடைத்து எறியப்பட வேண்டும்.
டிக்கோயாவில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 500 படுக்கைகள் கொண்ட பாரிய மருத்துவமனையாக உருவாக்கப்படுவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் இணைந்து உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
இந்நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் நடைபெறும் வன்முறை நிகழ்வுகளில் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் பொதுமக்கள் பலியாவது, அரசியல் படுகொலைகள், கடத்தல், காணாமல்போதல்கள் ஆகியவற்றிக்கு காரணமான அனைத்து அரசு மற்றும் அரசசார்பற்ற பயங்கரவாதங்களும் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும்.
எமது நாட்டின் அனைத்து அவலங்களுக்கும் மூலகாரணமாக அமைந்துள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காணும் போக்கு நிறுத்தப்பட்டு அரசியல் அதிகாரத்தை பிராந்தியங்களுக்கு பிரித்து வழங்குவதன் மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
மலையகத்தில் உயர்கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அட்டன் வலயத்தில் மலையக பல்கலைக்கழக கல்லூரி ஒன்றினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைத்து உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
அம்பகமுவ, நுவரெலிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மேலதிகமாக நுவரெலியா மாவட்டத்தில் மேலும் மூன்று தமிழ் பிரதேச செயலக பிரிவுகள் உருவாக்கப்பட்டு அங்கு பிரதேச சபைகள் செயற்பட வேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து தமிழ் பிரதேச செயலக பிரிவுகளுக்கும் தமிழ் பிரதேச செயலாளர்களும் தமிழ் அரச ஊழியர்களும் நியமிக்கப்பட்டு தமிழ் மொழியில் நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மலையகத்திலிருந்து சிறுவர்கள் சட்டவிரோதமான முறையில் தொழில்களுக்காக கடத்தப்படும் செயற்பாடுகள் சட்டரீதியாக அடையாளம் காணப்பட்டு இக்கொடுமை முற்றுமுழுதாக மலையகத்திலிருந்து துடைத்து எறியப்பட வேண்டும்.
இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை ஆகிய ஒதுக்குப்புற மாவட்டங்களில் வாழும் சுமார் இரண்டரை இலட்சம் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் இனவாத வன்முறை தாக்குதல்கள் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன், இத்தகைய துன்பங்களுக்கு உள்ளாகும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் அக்கறை செலுத்த வேண்டும்.