* மேல் மாகாண சபை உறுப்பினர் ராம் கோரிக்கை
ரொஷான் நாகலிங்கம்
கிழக்கு தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றிபெறச் செய்வதன் மூலம் மக்கள் யுத்தத்தையல்லாமல் சமாதானத்தையே விரும்புகின்றனரென்ற செய்தியை அரசுக்கு தெரிவிக்க முடியுமென மேல்மாகாண சபை உறுப்பினர் சி.வை.சி.ராம்.தெரிவித்தார்.
அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்தினால் மக்கள் தமது அன்றாட வாழ்வை கொண்டு நடத்துவதற்கு அல்லல்படுகின்ற நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்,
"ஐ.தே.கட்சியின் 2 1/2 வருட ஆட்சியை யாராலும் மறக்க முடியாது. நாட்டில் சமாதானம் ஏற்பட்டதுடன் மக்கள் வடக்குக்கும் தெற்குக்குமென எங்கும் எந்தவித பயமுமின்றி சுதந்திரமாக சென்று வந்தனர். அந்த காலகட்டத்தில் இன ஐக்கியம் ஏற்பட்டதுடன் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டது. இதற்கு காரணம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமையேயாகும்.
அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்தால், இவை எல்லாம் இல்லாமல் போனதன் விளைவாக நாடு அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மக்கள் பலியாவதுடன் கடத்தல் உட்பட மனித உரிமை மீறல்கள் அதிகரித்ததன் விளைவாக மக்கள் இன்று அச்சமடைந்துள்ளதுடன் விலைவாசியுயர்வால் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்க மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு காரணமாக குறிப்பாக வறிய மக்கள் தமது அன்றாட வாழ்வை கொண்டு நடத்த முடியாதுள்ளனரெனினும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எமது அயல்நாடான இந்தியாவிலும் வாழ்க்கை செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதெனினும் மக்களின் வருமானம் அதிகரித்ததன் காரணமாக பாதிப்பு ஏற்படவில்லை. அத்துடன் இந்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கு அரசு மக்கள் குறித்து அக்கறை செலுத்தாது யுத்தத்தை முன்னெடுக்கின்றது.
யுத்தத்தின் மூலம் எதுவித நன்மையையும் பெற்றுக்கொள்ள முடியாது. சமாதானத்தை மதிக்கின்ற கட்சி ஐ.தே.க. வேயாகும். அக்கட்சி ஆட்சிப்பீடம் ஏறும்போதே நாட்டில் சமாதானம் ஏற்படும்.
தற்போது கிழக்கு தேர்தலில் ஐ.தே.க.வுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளை ஆயுதக் குழுவினர் அம்மக்களை மிரட்டி பறிக்க முயற்சிக்கின்றனர். அம்மக்கள் பல்வேறு துன்பங்களின் மத்தியில் வாழ்கின்ற நிலையில் ஐ.தே.க.வுக்கு வாக்களிப்பதன் மூலமே சுதந்திரமாக வாழமுடியுமென்ற காரணத்தால் ஜனநாயகக் கட்சியான ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க வேண்டும்.
அதாவது கிழக்கு மக்களுக்கு விடிவை, சுதந்திரதைத் பெற்றுக் கொடுப்பதற்காகவே இத்தேர்தலில் ஐ.தே.க.களத்தில் குதித்துள்ளதனால் அராஜகத்தை ஏற்படுத்துகின்ற தீய சக்திகளுக்கு வாக்களிக்காது நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த கூடிய கட்சியான ஐ.தே.க.வுக்கே வாக்களிக்குமாறு நான் அம்மக்களை கோருகின்றேன்.
இத்தேர்தலில் ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் வெற்றியானது, அரசுக்கு மக்கள் தமது துன்பங்களிலிருந்து விடுதலைபெற சமாதானத்தை விரும்புகின்றார்கள் என்ற செய்தியை வழங்குமென்ற காரணத்தால் ஆயுதக் குழுவுக்கல்லாமல், ஜனாநாயக கட்சியான ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க வேண்டு"மென்றார்.