* மகாத்மாவின் பேத்தி எலா காந்தி கூறுகிறார்
எம்.ஏ.எம். நிலாம், யோ.நிமல்ராஜ்
இலங்கை மக்கள் அனைவருமே விரைவில் அமைதியும் சமாதானமும் கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சமாதானத்துக்கான மதத் தலைவர்களின் உலக மகாநாடு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்த அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தென்னாபிரிக்க எம்.பி.யுமான எலாகாந்தி (மகாத்மா காந்தியின் பேத்தி) அரசாங்கம் எதிர்க் கட்சிகளுடன் மட்டுமன்றி விடுதலைப் புலிகளுடனும் நாம் பேசத் தயாராகவிருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
எம்மால் எந்தளவுக்கு சமாதான முயற்சிகளை முன்கொண்டு செல்ல முடியுமோ அந்தளவு தூரத்துக்கு தீவிரப்படுத்துவோம். இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவருமே தொடரும் போரினால் களைப்புற்றிருக்கின்றனர். அவர்கள் சமாதானத்துக்காக ஏங்குகின்றனர் எனவும் எலாகாந்தி தெரிவித்தார்.
சமாதானத்துக்கான மதத் தலைவர்களின் உலக மாநாட்டின் இலங்கைக் கிளையை அமைத்து கண்டியிலும் திருகோணமலையிலும் கருத்தரங்குகளை நடத்திய பின்னர் இலங்கைக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு டிரான்ஸ் ஏசியா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே எலா காந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
"சமாதானத் தீர்வை உடனடியாக எட்டமுடியாதிருப்பினும் இலங்கை மக்கள் தமக்கு விரைவாக சமாதானம் வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். பிரச்சினையுடன் தொடர்புபட்டவர்களுக்கிடையில் இணக்கம் காணப்படுவதில் காலம் கடந்துகொண்டே போகின்றது. இன்று பேசி நாளை தீர்வு என்று எம்மால் உறுதியளிக்க முடியாது. ஆனால், எல்லாத்தரப்புகளையும் இணைக்கப்படுவதில் நாம் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியுள்ளது.
எமது அமைப்பு சமய வழியில் அமைதி தேட முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சிகளை முன் கொண்டு வருகின்றது.
அரசாங்கத்துடன் பேச வருகின்றோம். அத்துடன், பிரதான எதிர் கட்சி உட்பட மேலும் பல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவிருக்கின்றோம். இவர்களுக்கப்பால் விடுதலைப் புலிகளுடனும் பேசியாக வேண்டும். நிச்சயமாக அவர்களுடனும் பேசுவதற்குத் தயாராகவே இருக்கின்றோம். இலங்கையின் இனப் பிரச்சினைக்கு வன்முறைகளற்ற தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அந்த நம்பிக்கையுடனேயே இந்த முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளோம்" எனவும் எலா காந்தி தெரிவித்தார்.
சர்வதேச மதத்தலைவர்கள் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவரான கியோச்சி சுகினோ கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
"இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் பொருட்டு நான்கு மதங்களினதும் மதத் தலைவர்களை உள்ளடக்கியதான அமைப்பை மாவட்ட, மாகாண மட்டத்தில் உருவாக்கி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அதேசமயம் சமாதானத் தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளிலும் அமைப்பு முழு அளவிலான பங்களிப்பைச் செய்யும். இலங்கையில் இந்த அமைப்பை ஸ்தாபிக்கக் கிடைத்தமையானது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகவே நாம் கருதுகின்றோம்."
இலங்கை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கிங்ஸிலி ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
"அரசியல் தலைவர்கள் தத்தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் படி தமது நிலைப் பாடுகளை நியாயப்படுத்த முனைகின்றனர். ஆனால், மதத்தலைவர்கள் அப்படி எண்ணவில்லை மனிதாபிமான நோக்கோடு நாட்டையும் மக்களையும் பற்றியே அவர்கள் சிந்திக்கின்றனர். அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதிலேயே நாம் கூடுதல் அக்கறை காட்டிவருகின்றோம்.
ஜனாதிபதியுடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் ஆரம்பத்தில் பேசி அடுத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடனும் பேசுவோம். இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் பேசுவோம். நாம் ஆரம்பப்படியில் கால் பதித்துள்ளோம். தாமதங்கள், தடைகள் வந்தாலும் கூட முயற்சிகளை தொடர்வோம்" எனக் குறிப்பிட்டார்.