கொழும்பு மாநகரம் மற்றும் புற நகர்ப் பிரதேசங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் சிங்கள இனத்தைச் சேர்ந்த நபர்களுக்குப் புலிகள் இயக்கம் ரூபா 50 ஆயிரம் வரையில் மாதச் சம்பளத்தை வழங்கி வருவதாகவும் இவ்வாறு புலிகள் இயக்கத்திடம் பெருந்தொகையில் மாதாந்தம் சம்பளம் பெற்றுக் கொண்டு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து இயங்கும் 13 முக்கிய சிங்கள நபர்கள் தற்போது கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் வசிப்பதாகவும் புலனாய்வு உத்தியோகத்தர்களின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்தத் தகவலை அண்மையில் பிலியந்தலையில் நிகழ்ந்த பஸ் குண்டுத் தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சிங்கள நபரே விசாரணையின் போது புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவித்துள்ளார். இந்த நபரும் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து மாதாந்தம் ரூபா 50 ஆயிரம் பெற்று வந்துள்ளார் என்பதும் நெடுங்காலமாகப் புலிகள் இயக்கப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்காகத் தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்கி வந்துள்ளார் என்பதும் புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. குறித்த நபர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவருடைய பெயர் ரணசிங்க ஆராச்சிகே புத்திக எனவும் அவர் 21 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.