இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அக்தருக்கு அனுமதியளித்தாலும் இந்திய கிரிக்கெட் சபை அவரை பயன்படுத்த விரும்பவில்லை.
அக்தர், பாகிஸ்தான் அணிக்காக ஆட முடியாவிட்டால், ஐ.பி.எல். போட்டியிலும் பங்கேற்க அனுமதிக்க முடியாதென்று பெங்களூரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்பாக நடந்த இந்திய கிரிக்கெட் சபையின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் சபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மேல்முறையீட்டு நடுவர் மன்ற தீர்ப்பு நகல் கிடைத்த பின் அக்தர் விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்படவிருப்பதாக ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி தெரிவித்திருக்கிறார்.
ஷாருக்கானை உரிமையாளராகக் கொண்ட கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அக்தர், 1.7 கோடி ரூபாவுக்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாமல் போனால், கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) போட்டிக்கு அக்தர் சென்றுவிட வாய்ப்புள்ளது.