எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பெரும் இடைவெளியை உருவாக்குவதில் முனைப்புக்காட்டிவரும் ஆளும் தரப்பு முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பட்டம் பதவிக்காக காவடி தூக்குபவர்களும் இப்போது கிழக்கு முஸ்லிம்களுக்கிடையிலேயே பிளவுகளை ஏற்படுத்துவதில் தமது கேடு கெட்ட அரசியல் விளையாட்டைத் தொடங்கி இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான பஷீர் சேகுதாவுத் காட்டமாகச் சாடியுள்ளார்.
எமது கட்சியில் யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டுமென்பதை நாம் தீர்மானித்துக் கொள்வோம். தனது தவறை மறைத்துக் கொள்வதற்காக அடுத்தவன் வீட்டுக்குள் மூக்கை நுழைக்கவே ஆளும் தரப்பிலுள்ளவர்கள் முனைகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஆளும் தரப்பை ஆதரித்து நடந்த கூட்டத்தில் ஜனாதிபதிக்குக் காவடிதூக்கிவரும் அஸ்வர் ஹாஜியார் தாம் கடந்து வந்த பாதையை மறந்து புதிதாக அரசியலுக்கு வந்தவர் போல பேசத் தொடங்கியிருப்பதாகவும் பஷீர் சேகுதாவுத், மசூர் மௌலானாவுக்காக பேச வருபவர் அதனைத் தன்னால் எப்போதோ சாதித்திருக்கலாம். தனது இடத்தைக் கூட விட்டுக் கொடுத்திருக்கலாம். அதனைச்செய்யாமல் முஸ்லிம் காங்கிரஸின் மீது சுட்டுவிரல் நீட்டுவதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது எனக் கேட்க விரும்புகின்றேன்.
மசூர் மௌலானாவை ஒரு தடவையாவது பாராளுமன்ற உறுப்பினராக்கிப்பார்க்க மருதமுனை முஸ்லிம்கள் ஆசையோடு எதிர்பார்த்திருப்பதாக அஸ்வர் கூறியிருக்கின்றார். மசூர் மௌலானா நீண்டகாலமாகவே ஐக்கிய தேசியக் கட்சியில்தான் இருந்துள்ளார். கட்சியின் பீரங்கிப் பேச்சாளராகக் கூட அவர் வர்ணிக்கப்பட்டவர். கிழக்கிலோ வடக்கிலோ, முஸ்லிம்கள் வாழும் எந்தப் பகுதியிலுமோ ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக்கூட்டங்கள் மசூர் மௌலானா இல்லாமல் நடப்பது அரிதாகவே இருந்தன.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலத்திலிருந்து ஏ.எச்.எம்.அஸ்வர் ஹாஜியார் எத்தனை தடவை பாராளுமன்ற ஆசனத்தை அலங்கரித்திருக்கின்றார். ஏன் அமைச்சுப் பதவிகளைக் கூட வகித்தவர் தானே. அப்படியான சந்தர்ப்பங்களில் ஒரு தடவையாவது தமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஆப்த நண்பரான மசூர் மௌலானாவுக்கு விட்டுக் கொடுக்க முன்வந்தாரா? ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் வரையில் பட்டம், பதவி வகிக்கும் வரையில் மசூர் மௌலானாவை மறந்து போனவர்க்கு இப்போது அக்கறை ஏற்பட்டிருப்பது தான் புதுமையாக உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் பதவி கிட்டும் வரை அனுபவித்து விட்டுக் கடைசியில் கட்சியால் ஓரமாக்கப்பட்டதும் வாரிச் சுருட்டிக் கொண்டு மகிந்த சிந்தனையை வேதமாக ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கும் தமது பதவியை உறுதி செய்து கொண்டதேயொழிய மசூர் மௌலானாவுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க அஸ்வர் முன்வந்தாரா? இனியாவது முன்வருவாரா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மசூர் மௌலானாவை ஒரு போதும் கைவிடப் போவதில்லை. மருதமுனை மக்கள் என்ன கிழக்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி இந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் வியக்கும் விதத்தில் சரியான நேரத்தில் மசூர் மௌலானா உரிய உயர் பதவியில் அமர்த்தப்படுவார். பட்டம் பதவிகளுக்காக பெரியார் மசூர் மௌலானாவோ உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் போராளித் தோழர்களோ பிச்சைப்பாத்திரமேந்தி அன்னக் காவடி தூக்கமாட்டார்கள் என்பதைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
உண்மையான முஸ்லிம் தனது சமுதாயத்தைக்காட்டிக் கொடுத்துப் பதவிகளுக்கு ஒருபோதும் சோரம் போக மாட்டான் என்பதையும் உறுதிபடத் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.