குரு
வடக்கு, யாழ்ப்பாணம்- மேயர் துரையப்பா குண்டடிபட்ட போது யாரோ யாழ். மேயரை சுட்டுவிட்டனர் என்று சொன்னது ஊடகங்கள். உளவுத் துறையைச் சேர்ந்த பஸ்தியான்பிள்ளை குழுவினர் வேட்டையாடப்பட்ட போது எவரோ ஒரு குழுவினர் இந்த நாசகார வேலையைப் பார்த்து விட்டனர் என்றது செய்திகள். 1983 இல் 13 இராணுவத்தினர் ஒரே நேரத்தில் வடக்கில் கொல்லப்பட்ட போது ஏதோ இயக்கத்தினர் தான் இந்த வேலையைப் பார்த்து விட்டனர் என்றது அவை.
துைரயப்பாவில் தொடங்கிய இந்த ஆயுதப் போராட்டம் எத்தனையோ விதமான அகிம்சைப் போராட்டங்கள் அடக்கியொடுக்கப்பட்டதன் எதிரொலி என்பதனை நாடு இன்னும் உணர்வதற்குத் தயாரில்லாத சூழ்நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இப்போரில் ஒரு இலட்சம் பேரளவில் கொல்லப்பட்டு பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து பல இலட்சம் பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகள் அழிக்கப்பட்டு தேசப் பொருளாதாரமே சீரழிந்து போயுள்ள நிலையில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் மட்டுப்பட்டிருந்த போர் இன்று மேல், வடமத்திய, வட மேல், தென், ஊவா மாகாணங்கள் வரை வியாபித்துள்ளது.
தலைநகர் அமைந்துள்ள மேல் மாகாணத்தில் குண்டு வெடிப்புகளையும் அதிரடித் தாக்குதல்களையும் பொருளாதார இலக்குகளையும் அவ்வப்போது தாக்கி அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்தும் அப்பிராந்தியத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களை நடாத்தி வந்தனர். இதற்கு அரச தரப்பு- பாதுகாப்புப் பிரிவு தமிழ் மக்கள் மீது கெடுபிடிகளைக் கொடுத்து பதிலளிக்க முயன்றதில் பல நூற்றுக் கணக்கான அப்பாவிகள் காவு கொள்ளப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாணத்திலுள்ள எல்லைப்புறக் கிராமங்களில் வாழ்கின்ற அனைத்து இனங்களையும் சார்ந்த மக்கள் போரையே தமது வாழ்க்கையாக்கிக் கொண்டு ஜீவியம் நடாத்துகின்றனர்.
வட மேல் மாகாணத்தில் புத்தளம் -கற்பிட்டி, வில்பத்து பிரதேசங்களும் அவ்வப்போது இராணுவத்தினரினதும் தீவிரவாதிகளினதும் பலப்பரீட்சைக்களமாக அமைந்து விடுகின்றது.
தென் மாகாணம்- ஹம்பாந்தோட்டை யால சரணாலயமும் ஊவா மாகாணத்தில் புத்தள, மொனராகலை பிரதேசங்களும் இன்று போராட்ட மையங்களாக விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் விஷேட பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான கட்டளையிடும் இராணுவ அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
போர்க்காலச் சூழ்நிலையொன்றின் போது இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாத விடயம் என்பதனை மறுப்பதற்கில்லை.
ஆனால், அகிம்சையில் துவங்கிய உரிமைப் போராட்டம் அடக்கியொடுக்கப்பட்டதாலும் உரிமைகள் தொடர்பாக எதுவும் கொடுப்பதற்கில்லை அவை சரியாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, எவரும் மூச்சுக்காட்டக் கூடாது என்ற விதத்தில் பதில் வழங்கியமையாலேயே அகிம்சைப் போர் ஏ.கே. 45 யும் கடந்து பீரங்கி, ஆட்லறி, ஏவுகணைகள், விமானங்கள், போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் என்று வளர்ச்சியடைந்திருக்கின்றன.
இவையெல்லாவற்றிற்கும் அப்பால் புதிய போர் முரசொன்றை மலையகத்தில் கொட்டுவதற்கு அரசு தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது.
வட, கிழக்கிற்கு வெளியே பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் மலையகத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதுவும் அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள். மனச்சாட்சியுள்ள எவரும் இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகின்ற போது மிகவும் கீழ்மட்டத்தில் அமைந்திருப்பதை ஒத்துக் கொள்வார்கள். தற்போது தான் அச்சமூகம் தலை நிமிர முயன்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இச்சூழ்நிலையில் அங்கு நெருக்கடி நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
உடனடியாக அமுலுக்கு வரும் விதமாக மத்திய பிராந்தியத்திற்கு ஜனாதிபதியினால் ஒன்றிணைக்கப்பட்ட கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் யூ.பீ.எல். பிரனாந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மத்திய பிராந்தியத்திலுள்ள அனைத்து இராணுவம், கடற்படை, விமானப் படை, விஷேட பொலிஸ், அதிரடிப் படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனைத்து துறைகளும் உளவுத்துறை மற்றும் வர்த்தகத் துறைகளைச் சார்ந்த அனைத்து பாதுகாப்புப் பிரிவுகளும் இவரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில் மிக விரைவில் மலையகத்தில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம். இங்கு மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்ற சூழ்நிலைகளில் கட்டுப்பாடுகள் வர அதிகபட்ச வாய்ப்புகள் காணப்படுகின்றன. தமிழ் இளைஞர்கள் மீதான விசாரணைகள், சுற்றிவளைப்புகள், கைதுகள் அதிகளவு இடம்பெறக்கூடும்.
மலையகத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் இந்த விடயத்தில் அரசுடன் முரண்பட்டுக் கொள்கின்ற சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் எஜெண்டுகள் என்ற முத்திரை இவர்கள் மீதும் குத்தப்படும். அடக்குமுறை மலையகத்தில் ஆரம்பிக்கப்படுகின்றபோது அங்கு அமைதியின்மை ஏற்படும். இது நாட்டிற்கு நல்ல செய்தியாக அமையமாட்டாது.
வன்முறைகள் தலைதூக்குமிடங்களில் அதனைக் கட்டுப்படுத்துவற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்க்க முடியாது என்றாலும் அதனைக் கையாளுகின்ற முறையில் படைகள் அப்பாவிகளை வீணே தொந்தரவு செய்வதனைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
ஜனாதிபதி கட்டளையிடும் அதிகாரியொருவரை நியமனம் செய்வதற்கு வழிவகுத்த சம்பவங்கள் பின்வருமாறு;
பன்விலப் பிரதேசத்தில் ரான்ஸ் போமரொன்று தகர்க்கப்பட்டிருக்கின்றது. திகனையில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் பிரிவினர் கூறுகின்றனர். கண்டி மற்றும் தலவாக்கலைப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு புலிகளுடன் தொடர்புடைய பல நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் மலையகத்தில் இருக்கலாம் என பாதுகாப்புத் தரப்பினர் கருதுகின்றனர்.