காத்மண்டு:நேபாளத்தில் புதிய அரசை அமைப்பதற்கான வழிவகைகளை அரசியல் கட்சிகள் விரைவாக கண்டுபிடிக்க வேண்டுமென அந்நாட்டுப் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில் நடந்த 601 ஆசனங்களுக்கான தேர்தல்களில் மாவோயிஸ்ட்டுகள் 220 இடங்களையும் நேபாள காங்கிரஸ் 110 இடங்களையும் ஐக்கிய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் 103 இடங்களையும் பிடித்துள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக இடங்களை வென்றுள்ள மாவோயிஸ்ட்டுகள் அரசுக்கான தலைமைப் பொறுப்பைக் கோருகின்றார்கள்.
ஆனால், ஐக்கிய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் மற்றும் காங்கிரஸில் உள்ள இளைஞர்கள் மாவோயிஸ்ட்டுகள் தலைமையிலான அரசில் பங்கேற்க மறுத்து வருவதால் புதிய அரசை அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அரசு அமைப்பது தொடர்பாக இக்கட்சிகள் தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற போதும் இதுவரை எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே பிரதமர் கொய்ராலா இவ் அழைப்பை விடுத்துள்ளார்.