*சுட்டிக்காட்டும் `த கார்டியன்'
புத்திசாதுரியமான இணக்கப்பாடுகளின் காரணமாக தெற்காசியப் பிராந்தியத்தில் நிலவி வந்த மக்கள் போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இலங்கை மட்டுமே பிராந்தியத்தின் இறுதி நோயாளியாக இருப்பதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் `த கார்டியன்' நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் `த கார்டியன்' நாளேட்டில் வெளிவந்துள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தெற்காசியப் பிராந்திய நாடுகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சிங்கள தமிழ்ப் புத்தாண்டுச் செய்தியில் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்ட முடியும் என சூளுரைத்திருக்கின்றார்.
கடந்த 25 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து வந்த விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு அமைதியைப் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தின் இறுதி நோயாளியாக இலங்கை தற்போது காணப்படுகின்றது.
புத்திசாதுரியமான இணக்கப்பாடுகளின் காரணமாக பிராந்தியத்தின் மற்றுமொரு நாட்டில் நீண்டகாலமாக நிலவிவந்த மக்கள் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நேபாள மக்கள் போர் 18 மாதங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பாகிஸ்தானில் ஒரு தசாப்த காலமாக நிலவிவந்த இராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனநாயக ஆட்சி நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அரசாங்கம் எல்லைப்புற மாவட்டங்களைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த ஆயத்தமாகி வருகின்றது.
இலங்கையின் நிலைமை பாகிஸ்தான் மற்றும் நேபாள நிலைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது முதல் தொடர்ச்சியாகப் பாராளுமன்ற ஆட்சி அதிகாரமே இலங்கையில் நிலவி வருகின்றது.
கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் பொருளாதார நிலையிலும் இலங்கைப் பிராந்தியத்தில் ஓரளவு சாதகமான நிலையிலேயே காணப்படுகின்றது.
எனினும், இன மத மற்றும் பிரதேச ரீதியான மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளினால் மறுதலிக்கப்பட்டது.
இவ்வாறு நீண்ட காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான தமிழ் மக்கள் வன்முறை வழியைத் தேர்ந்தெடுத்தனர்.
ஒரே நாட்டிற்குள் நியாயமான அதிகாரங்கள் வழங்கப்படாது என்ற நோக்கில் பலர் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளை வெற்றி கொள்ள முடியும் என்ற தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு விடுதலைப் புலிகளுக்கு ஒன்றும் புதிதல்ல.
ஏற்கனவே, ஆட்சி செய்த பல அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதாக சூளுரைத்த போதிலும் இறுதியில் அவை தோல்வி முயற்சிகளாகவே முடிவடைந்தன.
போர் காரணமாக 70,000 க்கும் அதிகமான உயிர்கள் பலியாகியுள்ளன.
இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் இந்த சூளுரைக்குப் பின்னணியில் பாரதூரமான விளைவுகள் ஏற்படக்கூடும் என சுயாதீன அவதானிப்பாளர்களின் எச்சரிக்கை குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
போர்நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்வதாக சரத் பொன்சேகாவின் அரசியல் ஆசான் மகிந்த அறிவித்த போது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தமது அதிர்ச்சியை வெளியிட்டிருந்தன.
கிழக்கில் விடுதலைப் புலிகள் அடைந்த பின்னடைவை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் தனது இராணுவ முன்நகர்வுகளை மேற்கொள்கின்றது.
அரசாங்கம் கருணாவுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி அதன்மூலம் தமது பழைய சகாக்களை அழிக்கப் பயன்படுத்திக் கொண்டது.
எனினும் வடக்குப் பிரதேசமே விடுதலைப்புலிகளின் பலமான கோட்டையாகக் காணப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ முன்நகர்வுகளில் பாரிய இழப்புகளுடன் கூடிய சிறிய முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் முகமாலையில் இராணுவத்தினர் பாரிய இழப்புகளை எதிர்நோக்கினர்.படையினர் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்குச் செல்ல ஊடகவியலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
47 படையினர் இந்த மோதல்களின்போது கொல்லப்பட்டதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு தரப்பினரும் தமது இழப்புகளைக் குறைத்து எதிரணியின் இழப்புகளை மிகைப்படுத்திக் காட்டுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். எனினும் , சுயாதீன கண்காணிப்பாளர்களின் கருத்துப்படி 1,000 க்கும் அதிகமானோர் இரண்டு தரப்புகளிலும் காயமடைந்தோ அல்லது உயிரிழந்தோ இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.
500 மீற்றர் முன்னேறியுள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பகுதிகளை ஊடறுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என முன்னாள் இராணுவ ஜெனரல் ஜெரி டி சில்வா உள்நாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமைகளின் கீழ் விடுதலைப் புலிகள் தமது பழைய போர்த் தந்திரோபாயத்தை கடந்த வாரம் கொழும்பில் பயன்படுத்தியிருந்தனர்.
பிலியந்தலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
கடத்தல்கள், காணாமல் போதல்களுடன் விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்குத் தொடர்பிருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பான தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்த சில மணித்தியாலயங்களில் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் இந்து ஆலயம் ஒன்றில் புத்தாண்டு நாள் அன்று படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கையின் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மேற்குலக நாடுகள் மற்றும் வழமையாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது என வலியுறுத்தி வருகின்றன.
அமெரிக்க அரசாங்கம் அண்மையில் இலங்கைக்கு வழங்கும் இராணுவ உதவிகளை நிறுத்திக் கொண்டது.
இலங்கைக்கான வர்த்தக முன்னுரிமை சலுகையை வழங்குவதா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.
இந்த நாடுகளின் விமர்சன அலைகளைப் புறந்தள்ளி விட்டு வேறு நாடுகளுடன் புதிய பரிமாணங்களில் உறவுகளை ஏற்படுத்த ஜனாதிபதி மகிந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைப் பயணம் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் சீனப் பயணம் இதற்கு மேற்கோள் காட்டலாம்.
இந்தப் பயணங்களால் இலங்கைக்கு பல புதிய நிதியுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
விடுதலைப் புலிகளின் தலைமைகள் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதனை விட போராட்டத்தை நடத்துவதனையே சுலபமாகக் கருதுகின்றன.
இலங்கை அரசாங்கம் தமது சிங்களப் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு எந்தவித சலுகைகளையும் வழங்கியதாகத் தெரியவில்லை.
பணவீக்க அளவு 28 விழுக்காட்டை எட்டியுள்ளது. அரிசி மற்றும் தேங்காயின் விலை மிகவும் அதிகரித்துள்ளது.
பெரும்பான்மை சிங்கள எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான பிளவு காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவது தொடர்பாகவோ அல்லது பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது தொடர்பாகவோ மகிந்தவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
போரை இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதாக பல தடவைகள் இவ்வாறு எதிர்வு கூறப்பட்டது.
எனினும் , இந்தக் கூற்றின் மூலம் இந்த நிலைமை இன்னும் பல காலங்களுக்கு நீடிக்கும் என்பதே தெளிவாகின்றது.