*மாநில தகவல் ஆணையத்திடம் மனுத்தாக்கல்
சென்னை: வேலூர் பெண்கள் மத்திய சிறைச்சாலையில் ராஜீவ்காந்தி கொலைக் கைதி நளினியை, பிரியங்கா சந்திக்கவில்லை என்று தகவல் தந்த சிறைச்சாலை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநில தகவல் ஆணையத்திடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ராஜ்குமார், சட்டத்தரணிகள் எஸ். துரைசாமி, வி. இளங்கோவன் மூலம், மாநில தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது;
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா 19.03.2008 அன்று ரகசியமாக வேலூர் அருகேயுள்ள ஷ்ரீபுரம் கோவிலுக்கு சென்று வந்ததாக 20 ஆம் திகதி பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. அவர் ஒரு பகுத்தறிவாதி. அப்படிப்பட்டவர் எப்படி கோவிலுக்குச் சென்றிருப்பார் என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. ஆகவே, வேறு காரணத்திற்காக அவர் வேலூர் வந்திருப்பார் என்று நினைத்தேன்.
இதுபற்றி நான் விசாரித்தேன். ஆனால், பத்திரிகைகளுக்கு தவறான மற்றும் திசை திருப்பும் வகையில் செய்தி கொடுத்திருப்பதையும், அவர் கோவிலுக்குச் சென்றுவரவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.
ராஜீவ்காந்தி கொலையில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியை வேலூர் மத்திய சிறைச்சாலையில் சென்று பிரியங்கா சந்தித்துள்ளார். ஆனால், இதை அரசு அதிகாரிகள் ரகசியமாக மறைத்துவிட்டு, அவர் கோயிலுக்கு சென்றதாக திசை திருப்பும் வகையில் செய்தியைத் தந்துள்ளனர்.
பிரியங்கா சந்தித்த விவரத்தை ரகசியமாக அரசு தரப்பில் வைத்திருந்ததால், உண்மை விபரம் அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வேலூர் பெண்கள் மத்திய சிறைச்சாலை அத்தியட்சருக்கு 08.04.2008 அன்று விண்ணப்பித்திருந்தேன்.
எந்தச் சட்டத்தின் கீழ் நளினியை, பிரியங்கா சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது? பிரியங்காவுடன் யார், யார் சிறைக்கு வந்தார்கள்? எவ்வளவு நேரம் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையில் சந்திப்பு நடந்தது? இருவரும் சந்திக்கும் நோக்கம் என்ன? போன்ற விபரங்களைக் கேட்டு விண்ணப்பித்தேன். இதற்காக 10 ஆயிரம் ரூபா வங்கி நகல் வரைபையும் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பி வைத்தேன். சிறை அத்தியட்சர் நான் அனுப்பிய விண்ணப்பத்தை 10 ஆம் திகதி பெற்றுக்கொண்டார். ஆனால், 14 ஆம் திகதி வரை எனக்கு எந்தத் தகவலும் சிறையிலிருந்து வரவில்லை.
கடந்த மாதம் 15 ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் பிரியங்காவும், நளினியும் வேலூர் சிறையில் சந்தித்ததாக செய்தி வெளியானது. இந்த சந்திப்பை பிரியங்காவும் உறுதி செய்து பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார். சிறைக்கு தான் சென்றேன் என்றும், கோவிலுக்குச் செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் தனிப்பட்ட முறையில் பிரியங்கா, நளினியை சந்தித்தார் என்று அறிக்கை வெளியிட்டார். சட்டபூர்வமான முறைப்படிதான் நளினியை சந்தித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை தமிழக அரசும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. சட்டசபையிலும் இது குறித்து கருத்துக் கூறப்பட்டது.
கடந்த மாதம் 8 ஆம் திகதி சிறை அத்தியட்சருக்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு பதில் வராததால், உள்துறை செயலாளருக்கும் நான் விண்ணப்பித்தேன். அவர், சிறை அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். உள்துறை செயலாளர், நான் கொடுத்த விண்ணப்பத்திற்கு 20 நாட்கள் ஆகியும் பதில் தரவில்லை.
இந்த சூழ்நிலையில், 11.04.2008 திகதியிட்ட பதில் கடிதம் ஒன்று சிறை அத்தியட்சரிடமிருந்து எனக்கு வந்தது. சிறை அத்தியட்சர் ராஜசவுந்தரி இந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். `வேலூர் பெண்கள் தனிச் சிறை ஆயுள் தண்டனை சிறைவாசி நளினி குறித்து சில விபரங்கள் கோரியது தொடர்பாக பதில்க் கடிதம் அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நளினியை 14.03.2008 மற்றும் 19.03.2008 ஆகிய திகதிகளில் எவரும் நேர்காணல் பார்க்கவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
சிறை அத்தியட்சர் உள்நோக்கத்துடன் தவறான தகவலை தெரிவித்துள்ளார். ஆனால், பிரியங்காவும், நளினியும் சிறையில் சந்தித்து பேசியுள்ளனர். பிரியங்கா வந்து சென்றதை சிறை ஆவணங்களில் பதிவு செய்யப்படவில்லை. இந்த செய்தி வெளிவராது என்று நினைத்தும், யாரும் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள் என்று நினைத்தும் சிறை ஆவணங்களில் பதிவு செய்யாமல் உள்ளனர்.
தவறான தகவலை தந்ததால் தகவல் உரிமைச் சட்டம் 18(2) பிரிவின் கீழ், மாநில தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையம், சிறை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.