*இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிப்பு
உலகிலுள்ள போராளிகள் இடையே விடுதலைப் புலிகள் சக்தி படைத்தவர்கள் என்றும் முகமாலையில் அவர்கள் எப்போதும் மிகப் பலத்துடன் உள்ளனர் என்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார ஏடான `லங்காதீப'வுக்கு அவர் வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கேள்வி: அண்மையில் முகமாலைப் பாதுகாப்பு முன்னரங்கில் ஏற்பட்ட தாக்குதலானது அண்மைக் காலங்களில் படையினர் மீது இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாகும். இந்தத் தாக்குதல் தொடர்பான உங்களின் கருத்து என்ன?
பதில்: புலிகளின் இந்தத் தாக்குதல் திட்டம் தொடர்பாக எமக்கு ஏற்கனவே தெரிய வந்திருந்தது. நாம் அதற்கு முகம் கொடுப்பதற்குத் தயாராக இருந்தோம். தாக்குதல் இடம்பெற்ற நாள் அதிகாலை 2.30 மணியளவில் புலிகள் பாதுகாப்பு முன்னரங்குகளை நோக்கி கடுமையான மோட்டார் மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
நாம் அதனை வெற்றிகரமாக முறியடித்தோம். பாதுகாப்பு முன்னரங்குகள் இரண்டிற்கும் இடையில் சுமார் 3 மணி நேர உக்கிர மோதல் இடம்பெற்றது. விடிவதற்கு முன்னரே எமது 5 பற்றாலியன்கள் அவர்களின் பாதுகாப்பு அரண்களை அழித்து சுமார் 700 மீற்றர் முன்னேறிச் சென்றனர். முற்பகல் 11.30 மணி வரை நாம் அந்த இடத்தில் நிலை கொண்டிருந்தோம். அங்கிருந்து 8 கிலோ மீற்றர் தூரம் வரை குறுக்கே கிளாலி வரை நாம் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தினோம்.
புலிகள் மோட்டார் மற்றும் ஆட்லறிகளைப் பயன்படுத்தியதால் மோதல் உக்கிரமடைந்தது. எனினும் எமது தாக்குதலில் 160 புலிகள் கொல்லப்பட்டதாக எமது புலனாய்வுப் பிரிவு உறுதி செய்தது.
700 மீற்றர் முன்னேறிய நாம் மீண்டும் 100 மீற்றர் பின்னோக்கி நகர்ந்து காயமடைந்த எமது படையினரைத் தேடினோம். அதன் போது 47 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். 33 பேர் காணாமல் போயிருந்தனர். சுமார் 300 படையினர் காயமடைந்திருந்தனர். இதில் 200 பேர் சிறுகாயங்களுக்கு இலக்காகியிருந்தமையினால் அவர்கள் விரைவாக சிகிச்சை பெற்று மீண்டும் களமுனைக்குத் திரும்பியுள்ளனர். சுமார் 100 பேருக்கு நீண்ட சிகிச்சை அவசியமாகியுள்ளது. எமது சிறிதளவு ஆயுதங்களையே புலிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
நாம் தொடர்ந்தும் அங்கு எமது பலத்தை உறுதி செய்து வருகின்றோம். பிரதேசம் முழுவதும் நிலக்கண்ணி மற்றும் கவச வாகன அழிப்பு வெடிகளைப் புலிகள் புதைத்துள்ளனர். இவை அனைத்தையும் அகற்றி பிரதேசத்தை வழமை நிலைக்குக் கொண்டு வர படையினர் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 பேர் புலிகளின் கண்ணி வெடிகளுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். போரில் இவை சாதாரணமான நிலைமையாகும். நாம் அதற்குத் தயாராக வேண்டும்.
கேள்வி: இந்தத் தாக்குதலின் பின்னர் படையினரின் மனோ தைரியம் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
பதில்: இந்தத் தாக்குதலில் படையினர் எந்த வகையிலும் அதைரியம் அடையவில்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறுகின்றேன் . அவர்கள் நன்றாகப் போரிட்டார்கள். எமது சக்தி பலவீனமானதல்ல. 1,67,000 படையினரை வைத்திருக்கும் எமக்கு எமது எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு இது ஒரு தடையல்ல. படையினரின் தைரியம் பலவீனமடைந்துள்ளதாக நான் நினைக்கவில்லை. ஏனைய களமுனைகளிலும் தைரியும் குறைவடையவில்லை. 2 படையணிகளினதும் 5 பற்றாலியன்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன. முன்னைய மோதல்களுடன் ஒப்பிடுகையில் இந்த மோதலில் காயமடைந்தவர்கள் குறைவாகும்.
முகமாலை பாதுகாப்பு முன்னரங்கில் அடிக்கடி சிறு சிறு மோதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. சுமார் 1,400 படையினர் எமது பதுங்குகுழிகளில் உசார் நிலையில் இருந்தனர். அவர்கள் புலிகளின் போர் பலத்தை அறிந்தே இருந்தனர். எம்மிடம் திறமையான அதிகாரிகள் உள்ளனர். இப்போது உயிரே போனாலும் போர் புரியும் மனோநிலையை அவர்களிடம் நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம்.
இந்த மோதலில் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பை எடுத்துக்கொண்டால் நாம் சரியாகப் போரிடாது விட்டால் 160 புலிகள் உயிரிழந்திருக்க முடியாதே. உலகில் எந்த இராணுவமாவது காயமடையாது, உயிரிழக்காது போரிட்டதா?
காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்கள் பற்றி சந்தோஷமடையும் அதேநேரம், படையினர் கீழே விழும் போது கை தட்டுவற்கு காத்திருக்கும் பிரிவினரும் நம்மிடையே உள்ளனர். அவர்கள் சும்மாவேனும் புலிகளில் எத்தனைப் பேர் உயிரிழந்தனர் எனக் கேட்பதில்லை.
மலர்ச்சாலைகளுக்குச் சென்று, மருத்துவமனைகளுக்குச் சென்று உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அதிகமாக இருப்பின் மகிழ்பவர்களும் உள்ளனர். உயிரிழந்த காயமடைந்தவர்கள் போரிட்டதை நாம் வீரத்துடன் பார்க்க வேண்டும். போர்க்களத்தில் படையினருக்கு இழப்பு ஏற்பட்டாலும் நாம் அவர்களுக்கு தைரியம் அளிக்க வேண்டும். அவர்கள் தோல்வியடைந்தவர்கள் என யாரேனும் கூறுவார்களாயின் அவர்கள் துரோகிகள் ஆவர்.
கேள்வி: 25 வருடங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களைப் பார்க்கையில் அவர்களை இலகுவாக எண்ணி விட முடியாது. இராணுவத் தளபதி என்ற வகையில் நீங்கள் அவர்களின் போர்ப்பலத்தை எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்?
பதில்: உலகில் உள்ள கெரில்லாப் போராளிகள் இடையே புலிகள் சக்திமிக்கவர்கள் என்பதனை தெளிவாகக் கூறுகின்றேன். எமது நாட்டில் மோதல்கள் இடம்பெறும் பிரதேசங்களை எடுத்தால் புலிகள் பலமிக்கதாக இருந்தது முகமாலை பிரதேசத்திலேயே தான்.
புலிகளை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த மோதலுக்கு முன்னர் புலிகளின் ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் எம்மிடம் இருந்தன. இந்த மோதலில் புலிகள் பயன்படுத்துவார்கள் என எண்ணிய ஆட்லறி எதிர்ப்பு உட்பட அவர்களின் முழுமையான ஆயுதங்கள் பற்றிய அறிக்கை என்னிடம் இருந்தது. அதனால், நாம் புலிகளின் தாக்குதலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்தோம்.
எனினும் தற்போது புலிகளின் ஆட்பலம் குறைவடைந்துள்ளது. போர்க்களத்தில் அவர்களின் பலம் குறைவடைந்து வருகின்றது. புலிகள் இந்தப் போரில் தோல்வியடையாது இருக்க இருந்த ஒரே மாற்றுவழி யாழ். நகரைக் கைப்பற்றுவதாகும். எனினும், அவர்கள் அந்த இலக்கை எட்டவில்லை. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டனர். மாவீரர் நாள் போன்ற காலங்களில் அவர்கள் அங்கு தாக்குதல்கள் நடத்த முயற்சித்தனர். எனினும், முடியாது போய்விட்டது. இந்த நேரத்திலும் அந்த முயற்சி சாத்தியமாகுமா எனப் பார்ப்பதற்கு அவர்களுக்குத் தேவையாகியிருக்கலாம்.
முகமாலை மோதலில் முன்னால் இருந்தது விடுதலைப் புலித் தலைவர்கள், பின்னால் இளையவர்கள் இருந்தனர். அவர்கள் அவ்வாறே சம்பிரதாயமாகப் போர் செய்வார்கள். அதனால் தான் அவர்கள் திறமையாகப் போரிட்டார்கள்.
இறந்தவர்களில் புலிகளின் முக்கியஸ்தர்களும் இருந்தனர். இந்தத் தாக்குதலுக்கு என புலிகள் சுமார் 100 கடற்புலிகளையும் ஈடுபடுத்தியிருந்தனர். இறந்தவர்களின் உடைகளிலிருந்து நாம் அவற்றை உறுதி செய்துகொண்டோம். அவர்களுக்கு ஆட்பலம் குறைவு என்பதனையே அது காட்டுகின்றது.
மணலாறு மோதல்களின் போதும் 16 வயதிற்கு குறைவான பெண் பிள்ளைகள் இருந்தனர். முகமாலையில் நாம் முதலில் அவர்களைத் தாக்கி விரட்டினோம். வடக்கில் அவர்கள் பெரும் பின்னடைவிற்கு இலக்கானார்கள். அவர்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு வந்தனர். நாம் வாகரையைப் பிடித்த பின்னர் கிழக்கு விழ ஆரம்பித்தது. போரின் அதிக வெற்றி எம்பக்கம் வந்தது. அவர்களிடம் இருந்த காவல்துறை, நீதிமன்றம், காவலரண்கள் மற்றும் மருத்துவமனைகள் என்பன இப்போது அவர்களிடம் இல்லை.
புலிகளின் ஈழக்கனவு இப்போது விழ ஆரம்பித்துள்ளது. இப்போது அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஈழக் கனவிற்கான தூரம் நீளமானது. பிரபாகரனின் ஆயுட்காலத்திற்குள் அவர்கள் அந்த இடத்திற்கு செல்வது கனவாகி விடும்.
கேள்வி: சுமார் ஓராண்டு காலமாக புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் பின்னர் மடுத் தேவாலயம் மீட்கப்பட்டமை பற்றிய உங்கள் கருத்து?
பதில்: கடந்த 24 ஆம் திகதி மடுத் தேவாலயம் உட்பட பாலம்பிட்டி வரை 8 கிலோ மீற்றர் தூரம் வரையான பகுதியில் பலத்தை உறுதி செய்வதற்கு எம்மால் முடிந்தது. இந்தப் பிரதேசத்தைப் பிடித்தபோது புலிகளுடன் பெரும் மோதலில் ஈடுபடவில்லை.
மடுத் தேவாலயத்தின் கூரை புலிகளின் மோட்டார் தாக்குதலால் சிறிது பாதிக்கப்பட்டது. தேவாலயத்திற்கு அருகே சிறிய கட்டிடமொன்றை அவர்கள் வெடிக்க வைத்துள்ளனர். அது தவிர தேவாலயத்தைச் சுற்றி அவர்கள் புதைத்திருக்கும் கண்ணி வெடிகளை அகற்றி, பிரதேசத்தை வழமைக்குக் கொண்டுவர படையினர் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது இந்தப் பிரதேசம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்பான இடமாக உள்ளது. நான் இந்த ஆண்டுக்குள் பக்தர்களுக்கு மடுத் தேவாலயத்தை வணங்குவதற்கு வசதிகளைச் செய்து கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன். இதற்கு அமைய வெகுவிரைவில் மடு மாதா சொரூபத்தை தேவாலயத்தில் வைக்குமாறு நான் ஆயரிடம் கேட்டுள்ளேன். அது அவரின் கடமை.
விரைவில் அந்தப் பிரதேசத்தில் புதைத்திருக்கும் அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்றி பக்தர்களுக்கு அங்கு வர வாய்ப்பளிக்கப்படும். தற்போது வன்னியில் இருந்து ஓமந்தை ஊடாக மடுத் தேவாலயத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. ஏ-9 பாதையும் திறக்கப்பட்டுள்ளது. மடு வவுனியா பக்கத்தில் இருந்து முதல் 5 கிலோமீற்றர் தூரம் செல்வதற்கு எமக்கு சுமார் 6 மாதங்கள் எடுத்தன. மடுத் தேவாலய மீட்பானது நாம் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக் காண்கிறேன்.
கேள்வி: கிழக்கை மீட்டதைப் போன்று வடக்கை மீட்பது மிக இலகுவான காரியம் என நீங்கள் எண்ணுகின்றீர்களா?
பதில்: கிழக்கில் ஈடுபடுத்திய பலத்தை வடக்கிலும் ஈடுபடுத்துவோம். யாழ்ப்பாணத்தில் சுமார் 34,000 படையினர் உள்ளனர். அங்கு இருக்க வேண்டிய படையணிக்கு மேலதிகமாக இன்னுமொரு படையணி இருந்தது. இப்போது அங்கு மேலதிகமாக இரண்டு படையணிகள் உள்ளன. யாழ்ப்பாணத்திற்கு உள்ளேயும் நாம் பலமாக உள்ளோம். யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வந்தால் அது பிரபாகரனின் இறுதிப்பயணமாக இருக்கும். நிலத்தில் இடம்பெறும் மோதல்களில் முகமாலையில் இரு படையணிகளும், மன்னாரில் ஒரு படையணியும், மணலாறில் ஒரு படையணியும் பங்கு எடுத்துள்ளது.
மணலாறில் 4 கிலோ மீற்றர் நீளமான முன்னரங்கில் 12 கிலோ மீற்றர் பரப்பளவு பிரதேசத்தில் எமது பலத்தை நாம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளோம். கிழக்கில் உள்ள கடைசி விடுதலைப்புலி உறுப்பினர் இறக்கும் வரை அங்குள்ள ஒரு படை வீரரையும் அங்கிருந்து வடக்கிற்கு கொண்டு செல்லப்போவதில்லை.
மடுவில் இருந்து கிளிநொச்சி நோக்கி உள்ள 12 கிலோ மீற்றர் தூரத்திற்கு நாம் பலத்தை உறுதிப்படுத்தி வருகிறோம். வவுனியா மடு முன்னரங்கிலும் இன்னும் 10 கிலோமீற்றர் தூரம் வரை நாம் முன்னேறினால் புலிகளுக்கு மிகவும் கடினமாகி விடும்.
திருகோணமலை, மட்டக்களப்பு, கஞ்சிக்குடிச்சாறு ஆகிய பிரதேசங்களில் நாம் சிறப்பான முறையில் போரிட்டோம். கதிர்காமம் - புத்தல பிரதேசத்திலும் கும்புக்கன் ஓயா வரை 1,400 படையினரை ஈடுபடுத்தி அப்பகுதிகளை எமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளோம். கடந்த ஓகஸ்ட் முதல் இதுவரை இடம் பெற்ற மோதல்களில் சுமார் 7,000 விடுதலைப்புலிகளை அழித்துள்ளோம். அதற்கு அமைய பார்க்கும்போது வடக்கை மீட்பது எமக்கு அவ்வளவு கடினமாகாது.
கேள்வி: பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிந்த, அழிந்து வரும் இந்தப் பயங்கர போரின் முடிவு எவ்வாறு அமையும்?
பதில்: இந்தப் போரை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு தேவையான வளங்கள் எமக்கு கிடைத்துள்ளன. ஆட்பலம் உள்ளது. போர்க்களத்தில் இருப்பவர்களின் நலன்கள் சிறந்த நிலையில் உள்ளன. படையினரின் மனோ வலிமையும் உயரிய நிலையில் உள்ளது.
இது வரை காலமும் நாம் புலிகளுக்கு ஏற்படுத்திய அழிவுகளைப் போல் எதிர்காலத்திலும் அழிவுகளை ஏற்படுத்தினால் போரை முடிவிற்குக் கொண்டு வருவது சிரமம் அல்ல. புலிகளின் உயிரிழப்புகளை கணக்கிட்டுக் கொண்டு போர் செய்ய முடியாது. நாம் இந்த இடத்தை அடைவதற்கு அதிகமாக உழைத்துள்ளோம். வருடத்தின் 365 நாட்களும் போர் செய்துள்ளோம். எமக்கு போயா விடுமுறை, ஞாயிறு, புத்தாண்டு, வெசாக், பொசன், நத்தார் விடுமுறைகள் இல்லை. அனைவரும் சூரிய மங்களத்தை நடத்தும் போது பட்டாசு கொளுத்தும்போது நாம் காட்டில் வெடி வைக்கின்றோம். மோட்டார் அடிக்கின்றோம்.
எனது பதவிக் காலத்தில் கட்டாயமாக போரில் வெற்றி பெறுவோம். போரைப் பிழையான வகையில் பார்த்தவர்கள் அன்று கவலையடைய வேண்டி ஏற்படும். எம்மீது சேறு பூசி எமது மனோதைரியத்தை குலைக்க முற்படுபவர்களை எண்ணி நாம் கவலையடைகின்றோம்.