*தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பு
யுத்த நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவும், தமிழர் பிரச்சினையை மூடி மறைப்பதற்காகவுமே வடக்குக்கென விசேட செயலணிக்குழுவை நியமித்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தையும்
அதனோடிணைந்த சக்திகளையும் கிழக்கு தேர்தலில் தோற்கடிக்க முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தமிழரசுக் கட்சியின் செயலாளரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா கூறுகையில்;
"வடக்கு விசேட செயலணிக் குழு அரசாங்கத்தின் மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த உதவியாக நிறுவப்பட்டுள்ளது. இக்குழுவின் செயற்பாட்டினால் தமிழர்களுக்கு பயன்கள் எதுவும் கிட்டப்போவதில்லை.
யுத்த நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசாங்கமும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும், தமிழர் பிரச்சினையை மூடி மறைக்கவுமே இச்செயலணிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒருபோதுமே தமிழர் அபிலாஷைகளை பிரதிபலிக்கப்போவதில்லை.
வடக்கு விசேட செயலணிக் குழுவின் மூலம் இங்கு இனப்பிரச்சினையே இல்லையென்ற மோசமான தோற்றப்பாட்டை உருவாக்கவும் சதி நடந்தேறுகிறது. இதனைக் கண்டு ஏமாறுவதற்கு தமிழ்ச் சமூகம் தயாரில்லை.
இதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது ஒட்டுமொத்த சமூகத்தின் விருப்பங்களுக்கு எதிராகவே நடந்தேறுகிறது. எனவே தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலை புறக்கணிக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணத்தை பிரித்துள்ளதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயன்ற அரசாங்கம் தற்போது அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் தமிழர் தாயக கோட்பாட்டை சிதைவடையச் செய்கிறது.
தேர்தல் மூலமாக சமூகங்களை மோதவிட்டு, தமிழர் தாயகத்தில் தமிழர் பலத்தைக் குறைக்கும் நாசகார நடவடிக்கையே முனைப்புப் பெற்றுள்ளது" என்றார்.
இதேவேளை, தமிழர் தேர்தலை பகிஷ்கரித்தால் அவர்களின் வாக்குகள் சூறையாடப்படாதாவென மாவை சேனாதிராஜா எம்.பி.யிடம் தினக்குரல் கேட்டபோது;
மிக விரைவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண மக்களை அறிவுறுத்தி அறிக்கையொன்றை விடுக்கும்.
எனினும், கிழக்குத் தேர்தலில் அரசாங்கத்தையும், அதனோடிணைந்த சக்திகளையும் தோற்கடிக்கும் அணுகுமுறையே அவசியமென வலியுறுத்துவதாகவும், இவ்வலியுறுத்தலே கூட்டமைப்பின் அழைப்பாக அமையுமெனவும் பதிலளித்தார்.