*300 தமிழர்கள் கைது; உறவினர்கள் அமைச்சர்களிடம் முறையீடு
கொழும்பு ஜிந்துப்பிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை காலை படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலில் 300 தமிழர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜிந்துப்பிட்டி வீதி, கன்னாரத்தெரு, ஆண்டிவால் வீதி, செட்டியார் தெரு, கதிரேசன் வீதி உட்பட பல பகுதிகளிலும் நேற்றுக் காலை இந்தப் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடைபெற்றது.
ஜிந்துப்பிட்டியையும் அதனை அண்டிய பகுதிகளையும் நேற்றுக் காலை சுற்றிவளைத்த பெருமளவு படையினரும் பொலிஸாரும் வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் லொட்ஜ்களில் இந்தத் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது 300 இற்கும் மேற்பட்டோர் வீதிகளுக்கு கொண்டு வரப்பட்டு நீண்டநேர தீவிர விசாரணைகளின் பின் 84 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் மிகப்பெரும்பாலானோர் அடையாள அட்டைகள், பொலிஸ் பதிவுகள் உட்பட அனைத்து ஆவணங்களை வைத்திருந்த போதும் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக அமைச்சர் பெ. சந்திரசேகரன் விடுத்த அறிக்கையில், இவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சந்திரசேகரனிடம் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் அமைச்சர் சந்திரசேகரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
வர்த்தக நிலையங்களில் தொழில்புரிந்து இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்குமிடத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு பணிப்புரைகளை வழங்குமாறும் அமைச்சர் சந்திரசேகரன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து, 15 பேர் மாத்திரமே விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் எம்.எஸ். செல்லச்சாமி கூறுகையில்;
கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடைகளில் இருந்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட 89 தமிழர்களில் 85 பேர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போஷகரும் பிரதி தபால் அமைச்சருமான எம்.எஸ். செல்லச்சாமி தெரிவித்தார்.
நேற்றுக் காலை செட்டியார் தெருவை முற்றுகையிட்ட இராணுவத்தினர் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக, நகைக்கடைகளில் வேலை செய்வோரே பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபருடனும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடனும் உடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கி இவர்களை காரணமின்றி கைது செய்திருப்பதால் உடன் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். இது தொடர்பாக நகைக்கடைச் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் எனக்குத் தெரிவித்தனர்.
தமிழர்களை வகை தொகையின்றி கைது செய்யும் சம்பவங்கள் மீண்டும் தொடர்கிறதோ? என்று கருத வேண்டியுள்ளது. விசாரணைகளுக்குப் பின்னர் 85 பேர் விடுவிக்கப்பட்டனர். 4 பேர் தொடர்ந்தும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததாகவும் செல்லச்சாமி தெரிவித்தார்.