கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் புதன் கிழமை இரவு நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள் செயலகம் பணிப்புரை விடுத்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மாகாணத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் சூறாவளிப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையிலேயே சகல தேர்தல் பிரசாரங்களும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா பணிப்புரை விடுத்துள்ளார்.
இதுகுறித்த அறிவுறுத்தல்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் மாலை 6 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென பொலிஸார் கடும் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், ஆளும் கட்சியினர் கட்டுப்பாடுகளை மீறுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முஸ்லிம் பிரதேசங்களில் சூடுபிடித்திருந்த தேர்தல் பிரசாரம் தற்போது தமிழ் பிரதேசங்களிலும் அதிகளவில் இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோர் அங்கு தமது சூறாவளிப் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அமைச்சர்கள் சுயேச்சைக்குழுக்களை ஆசை வார்த்தைகாட்டி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட வைப்பதிலும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டில் போட்டியிட இடம் கிடைக்காத கட்சிகளிலுள்ள சிலரை ஆளும் கட்சியுடன் கூட்டிணைத்து அவர்கள் மூலம் இறுதிநேர தீவிர தேர்தல் பிரசாரத்திற்கும் ஆளும்கட்சி திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு முன்னதாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்குச் சென்று தீவிரப் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.