* கள்ள வாக்குகளை கண்டுபிடிக்க சூட்சுமம்; ஆணையாளர் அறிவிப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஆயுததாரிகளோ வேறு குழுக்களோ வாக்களிப்பை குழப்பினாலோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலோ தமக்கிருக்கும் அதிகாரத்தின் கீழ் குறிப்பிட்ட இடங்களில் வாக்களிப்பை இரத்துச் செய்து பிறிதொரு தினத்தில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்படலாமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலாவது ஆயுததாரிகளோ வேறு வன்முறைக் குழுக்களோ மக்களை வாக்களிக்க விடாமல் அடாவடித்தனத்திலீடுபட்டால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு இரத்துச் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
வாக்களிப்பு தினத்தன்று முப்படைகளும் , பொலிஸாரும் தவிர வேறு எவரும் ஆயுதங்களுடன் நடமாட இடமளிக்கப்பட மாட்டாது. அத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் கூட்டம் கூடுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது. தேர்தல் சட்டவிதிகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருக்கின்றார்.
வாக்காளர்களுக்கோ வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கோ அச்சுறுத்தல் மற்றும் பலவந்தங்களை மேற்கொள்ள எவராவது முற்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவதோடு அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பும் இரத்துச் செய்யப்படும்.
வாக்களிப்பு நிலையங்களையும் வாக்குப் பெட்டிகளையும் பாதுகாப்பதற்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் திசாநாயக்கா குறிப்பிட்டிருக்கின்றார்.
வாக்களிப்பு இரத்துச் செய்யப்படும் வாக்களிப்பு நிலையங்களில் ஒருவார காலத்தின் பின்னர் மறுவாக்குப்பதிவு இடம்பெறுமெனவும் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஒட்டு மொத்த வாக்குகள் எண்ணும் பணிகளும் ஒத்திவைக்கப்படும்.
அதேசமயம் கள்ளவாக்குப் போடுவதை தவிர்க்கும் பொருட்டும் கள்ளவாக்குகள் போடப்பட்டிருந்தால் அவற்றை நிராகரிப்பதற்கும் ஏற்ற வகையில் தேர்தல் திணைக்களம் சில சூட்சுமமான மாற்று நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் திசாநாயக்கா தெரிவித்திருக்கின்றார்.