"சென்னை என்றாலே எனக்குக் குஷிதான்". கொளுத்தும் சென்னை வெயிலும் குளிர்ந்து போகும் அளவிற்கு படுசுவாரஸ்யமாகப் பேசுகிறார் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். பெங்களூரில் இந்திய பிரீமியர் லீக் போட்டி (ஐ.பி.எல்) தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து தன் பேச்சினால் சென்னை வெயிலை கிளீன் போல்டாக்கிவிட்டார்.
நான் வசிக்கும் கண்டி நகரை விட சென்னையில் வெயில் அதிகம்தான் என்றாலும் இந்த சீஸனில் அடிக்கடி இங்கு வந்து போவதால் பழகிப் போச்சு. அதை விட என் கவனமெல்லாம் நன்றாக ஆட வேண்டும் என்பதிலேயே இருப்பதால் இந்த வெயில் எனக்கு உறைக்க வில்லை" என்று சொல்லி விழிகளை உயர வைக்கிறார் முத்தையா முரளிதரன்.
அவருக்கு நேர்மாறான அனுபவம் அவரோடு வந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த ஸ்ரீபன் பிளமிங்குக்கும் சகல துறை வீரர் ஓரமுக்கும் கிடைத்தது.
வெயிலைப் பார்த்து `பச்சை மிளகாயைக் கடித்தது போல்' துடித்துப் போய் உடம்பெல்லாம் தண்ணீர் சொட்ட ஏ.ஸி. அறைக்குப் போய் தஞ்சமடைந்து கொண்டார்கள் அந்த ஓட்டகச்சிவிங்கி உயர வீரர்கள். அவர்களைப் பார்த்து `ஹாய்!' சொன்னபடி முத்தையா முரளிதரன் வந்தார். அவர் பேசிய ஒவ்வொரு பேச்சிலும் ஒரு வீரருக்குள்ள பொறுப்புணர்வு அதிகம்.
* சென்னை சுப்பகிங் அணியில் இடம்பெற்றதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? "சென்னை அணியில் இடம்பெற்றதால் எனக்கு இரட்டை சந்தோஷம். ஒன்று என் மனைவி மலர் பிறந்த ஊர் சென்னை. இரண்டு தமிழ் நாடுதான் என் தந்தை பிறந்த பூமி. சந்தோஷத்துடன் பெருமையாகவும் இருக்கின்றது". (கண்களை விரித்து அழகாகச் சிரிக்கிறார்)
* உங்களை விட வயது குறைந்த தோனி கப்டனுக்குக் கீழ் நீங்கள் ஆடுவதைப் பற்றி.....?
"தோனியோடு விளையாட நான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன். தோனி துடுப்பு மட்டையையும் கால் காப்புகளையும் மட்டும் எடுத்துச் செல்வதில்லை. கூடவே அதிர்ஷ்டத்தையும் அழைத்துச் செல்கின்றார். செல்லும் இடமெல்லாம் வெற்றிகளைக் குவித்து வருகின்றார். சென்னையிலும் அதுதான் நடக்கும். என்னைப் பொறுத்தவரை நான் நன்றாக ஆட வேண்டும் என்பது மட்டுமே என் குறிக்கோள்".
* ஐ.பி.எல். போட்டிகளினால் டெஸ்ட் போட்டி பாதிக்காதா?
"நிச்சயம் பாதிப்பு இருக்காது. ஒரு கால்பந்தாட்ட வீரர் எப்படி தனது நாட்டிற்காகவும் கிளப்பிற்காகவும் ஆடுகிறாரோ அது போல்தான் இதுவும். அதனால், சர்வதேச வீரர்கள் நிறையப் பேர் ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்".
* சரி. உங்களுக்கு எதில் பற்று அதிகம்?
"தாய் நாட்டிற்காக ஆடுவதில் தான் எனக்கு அதிக ஆர்வமும் பற்றும் இருக்கிறது. அதற்காக கிளப்பிற்காக ஆடும் போது சாதாரணமாக ஆடிவிட மாட்டேன். என் முழு சக்தியையும் அதில் காட்டுவேன்."
* 20 ஒவர் போட்டிகளால் டெஸ்ட் போட்டிகளுக்குத்தானே பாதிப்பு?
"இன்றைக்கு உலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. நிற்கும் நேரம் உட்காரும் நேரத்தைக்கூட மக்கள் பயனுள்ளதாக செலவழிக்க விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட சூழ் நிலையில், ஐந்து நாட்கள் உட்கார்ந்து டெஸ்ட் போட்டிகளை பார்க்க அவர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை. அதனால் அவர்கள் 20 ஓவர் போட்டிகளைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள். ஒருவேளை 50 ஓவர் போட்டிகளின் ஈடுபாடு கொஞ்சம் குறையலாம். ஆனால் அவ்வப்போது நடக்கும் டெஸ்ட் போட்டிகளை மக்கள் நிச்சயம் ரசித்துப் பார்ப்பார்கள். டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவத்தை வைத்து இதை நான் சொல்கிறேன்".
* 20 ஓவர் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதிக்க முடியுமா?
"இப்படியொரு கேள்வி கேட்கவேண்டிய அவசியமே இல்லை. நிச்சயம் சாதிக்கமுடியும். ஒருநாள் போட்டியில் ஒருவர் 10 ஓவர்கள் போடலாம். டெஸ்ட் போட்டிகளில் எத்தனை ஓவர்கள் வேண்டுமானாலும் பந்து வீசலாம். ஆனால் இருபது ஓவர் போட்டிகளில் ஒருவர் நான்கு ஓவர்கள்தான் பந்துவீச முடியும். இதில்தான் எளிதாக சிக்சரும் அடிக்க முடியும்; விக்கெட்டையும் வீழ்த்த முடியும்."(சிரிக்கிறார்)
* சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி?
"சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியே சென்னை சேப்பாக்கம்தான். ஆனால், இந்த ஆடுகளம் சில நேரம் பவுன்ஸ் ஆகும். சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடும்போது இந்த ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்குக் கைகொடுக்காமல் போய்விட்டது. காரணம், போட்டி தொடங்கியதற்கு முன்புவரை கொட்டித்தீர்த்த மழை. அதுதான் ஆடுகளத்தின் போக்கையே மாற்றிவிட்டது."(மீண்டும் சிரிப்பு).