அமெரிக்கத் துணை ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என பாபி ஜிந்தால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுநராக இந்தியரான பாபி ஜிந்தால் பதவி வகித்து வருகிறார்.
இவர் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மைக்- கெய்னுடன் இணைந்து துணை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரென செய்திகள் வெளிவந்தன.
ஆனால், இவ்விடயம் தொடர்பான செய்திகளை பாபி ஜிந்தால் அவ்வப்போது மறுத்துவந்தார்.
இந்நிலையில் நேற்று அமெரிக்க செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்களுக்கு தெரிவிக்கையில்;
துணை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நான் பல தடவைகள் கூறிவிட்டேன். எனினும் திரும்பத் திரும்ப அதையே கேட்கிறார்கள்.
முன்பு சொன்ன பதிலையே தான் இப்போதும் திட்டவட்டமாக சொல்கிறேன். துணை ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை.
லூசியானா ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டபோது மக்களுக்கு இது ஒரு அற்புதமான நேரமெனக் கூறியிருந்தேன்.
எனவே, எனது நோக்கமெல்லாம் மாகாண ஆளுநர் பணியில் சிறப்பாகப் பணியாற்ற வேண்டுமென்பது தான் எனத் தெரிவித்தார்.