அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு குஆம் மாநிலத்தில் நடந்த வாக்கெடுப்பில் செனட்டர் பராக் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் தெரிவில் குடியரசுக் கட்சியின் சார்பில் மைக்-கெய்ன் தெரிவாகியுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் கிலாரி கிளின்டன் மற்றும் செனட்டர் பராக் ஒபாமாவிடையே தொடர்ந்தும் கடும் போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில் குஆம் மாநிலத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஏழு வாக்குகளால் கிலாரி கிளின்டனைத் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார் பராக் ஒபாமா.
நான்கு பேராளர்களை மாத்திரமே குஆம் மாநிலம் கொண்டிருந்ததால் இருவரும் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
இதேவேளை, குஆம் மாநிலத்திலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்குரிய தகுதி இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியானா மற்றும் வடக்கு கரோலினா ஆகிய மாநிலங்களில் நாளை செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் குஆம் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியானா மற்றும் வடக்கு கரோலினா மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் தான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் மாற்றத்தைக் கொண்டுவருமென கிலாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின்படி பராக் ஒபாமாவே வாக்குகளிலும் பேராளர்களின் எண்ணிக்கையிலும் கூடிய எண்ணிக்கையைப் பெற்று முன்நிலையில் உள்ளார்.