இவ்வருடத்திற்குள் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் தனக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அப்பாஸ் வாஷிங்டனில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷுடன் பேச்சுக்களை நடத்திய பின்னரே இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆனால், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை தொடரப்போவதாக உறுதியளித்துள்ள அப்பாஸ் பலஸ்தீன அரசை உருவாக்குவதற்கான இறுதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் எமக்கும் இஸ்ரேலுக்குமிடையில் அதிகளவான இடைவெளி நிலவுகிறது. இந்நிலையில் இவ்வருட இறுதிக்குள் இவ்உடன்படிக்கையை அடைய முடியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், எனது விருப்பம் பேச்சுவார்த்தையே. நல்லதொரு முடிவை எட்டும் வரை நான் பேச்சுக்களை தொடருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகளவான உண்மை நிலைப்பாடுகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உடன்படிக்கை சாத்தியமாகும். உடன்படிக்கையொன்று அடையப்படாவிட்டால் கடினமான நிலைப்பாடொன்றை பலஸ்தீனியர்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்நிலையில் ஏனைய அரேபிய பலஸ்தீன தலைவர்களுடன் இணைந்து நான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.