மலையக அரசியல் தலைமைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்
அமைச்சர் பதவி வகிக்கின்ற மலையக அரசியல் வாதிகள் மக்களுக்கு உண்மையாக சேவை செய்யாமல் அமைச்சுகளின் நிதியை தமக்கும் தமது குடும்ப வளர்ச்சிக்குமே பெரும்பாலும் செலவழிக்கின்றார்கள். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றார்கள் என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின பொதுக் கூட்டத்தில் தலைமையேற்றுப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொழிலாளர்கள் தேசிய சங்கத்தின் மேதின பேரணி தலவாக்கலை நகர மத்தியிலிருந்து ஆரம்பமாகி தலவாக்கலை பிரதான பஸ்தரிப்பு நிலையம் வரை வந்ததைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் ஆரம்பமாகியது. இந்தப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிதிச்செயலாளர் செபஸ்டியன், பிரதி நிதிச் செயலாளர் எம்.உதயகுமார் உட்பட இந்தச் சங்கத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
பி.திகாம்புரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
இன்றைய அரசாங்கம் பெருந்தோட்டப் பகுதி உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக கோடிக்கணக்கான நிதியை வழங்கி வருகின்றது.
மலையக தமிழ் பாடசாலைகளில் நிலவிய ஆசிரிய பற்றாக்குறையை இந்த அரசாங்கமே தீர்த்து வைத்துள்ளது. இவ்வாறான அரசாங்கத்தின் நல்ல விடயங்களை மலையகத் தலைவர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் தமது கட்சி, தொழிற்சங்க வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, அரசாங்கம் தான் செய்கிறது என்பதை மக்கள் மத்தியில் மூடி மறைத்து விடுகின்றார்கள்.
ஆனால் உண்மை நிலைவரம் என்ன என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வுக்கேற்ற சம்பளவுயர்வைத் தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள முடியாமைக்கு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களும் கூட்டொப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களுமே காரணமாகின்றார்கள்.
வர்த்தகர்களும் இந்த மண்ணில் பிறக்காதவர்களும் எமது சமூகத்துக்கு உண்மையில் சேவை செய்ய முடியாது.
நான் மாகாணசபை உறுப்பினராக இருந்த போதிலும் இந்த மக்களுக்கு உண்மையாக சேவை செய்வதற்குக் காரணம் இந்த லயத்து வாழ்க்கையை அனுபவித்தமையே ஆகும்.
அதனால் தான் இளைஞரணி என்னைச் சூழ்ந்திருக்கிறது. மேல்கொத்மலை திட்டத்தைத் தடுக்க போராட்டம் செய்த தலைவர்களையெல்லாம் இன்று இந்தத் திட்டத்தின் மூலம் பாரிய வருமானத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இவர்களை நம்பிய இளைஞர்கள் இன்று நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, எமது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் ஏமாற்றும்பேர்வழிகளிடமிருந்து எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முதலாளியின் மகனையும் பேரனையும், நாம் தலைவராக ஏற்றுக் கொள்வோமாயின் எமது சமூகத்துக்கு விடிவு என்றும் கிடைக்கப் போவதில்லை.
இளைஞர்கள், ஆசிரியர்கள், ஏனையவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது சமூகத்தின் நல்லதொரு மாற்றத்துக்கு வழிசமைப்போம் என்றார்.