* அமைச்சர் பேரியல் அஷ்ரப் எச்சரிக்கை
ஐ.தே.கட்சிக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் பிரிக்கப்பட்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தை மாற்றி வட,கிழக்காக இணைத்து விடுதலைப்புலிகளுக்கு தாரை வர்துக் கொடுக்கின்ற வாக்குகளாக அமையும். இதனால் விடுதலைப்புலிகளின் கைகள் ஓங்கி கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களை அடக்கி ஆளுகின்ற சக்தியாகவும் அது மாறிவிடும். இந் நிலையில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதை தவிர வேறு தெரிவாக எதுவும் இருக்காது. வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு போன்றவற்றை உறுதிப்படுத்துகின்ற வாக்குகளாக அமையுமென வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சரும் நுஆத் தலைவியுமான பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
மாளிகைக்காட்டில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்; போலி வீரவசனம்பேசி மக்களை படு பாதாளத்தில் தள்ளிவிட்டு அவர்களின் முதுகுகளில் சவாரி செய்கின்ற மு.கா.தலைமையில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை பெறவேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பதன் மூலமே அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய மாகாணசபைத் தேர்தல் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வரலாற்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இந்த கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுடைய மாகாணமென்பதும் இந்த மாகாணத்தில் வாழும் முதலமைச்சர் முஸ்லிமாக இருக்க வேண்டுமென்பதும் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் கண்ட கனவாகும். இவ்வாறு தெரிவு செய்யப்படும் முதலமைச்சர் கிழக்கில் வாழ்கின்ற மூவின மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அரவணைத்துச் செல்கின்ற முதலமைச்சராக இருக்க வேண்டுமென்பதையே நாங்கள் விரும்புகின்றோம்.
இதற்கு எதிர் மாறாக தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தன்னுடைய தலைமைப் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் மக்களை தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இம்முறையாவது சுயமாக சிந்தித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறுகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்துக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதன் ஊடாகத்தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துக்கு நல்ல பாடம் புகட்ட முடியும். அவ்வாறு பாடம் புகட்டும் பட்சத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து சரியான பாதையின் ஊடாக கட்சியையும் முஸ்லிம் மக்களையும் வழி நடத்த முடியுமென்றார்.