மணலாறு களமுனையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் வான் புலிகள் வீசிய 5 குண்டுகளில் சில கட்டிடங்களும் 6 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதுதொடர்பாக `சண்டே ரைம்ஸ்' வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் சில முக்கிய பகுதிகள் வருமாறு;
ஊடக சுதந்திர நாளினை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதும் கொண்டாடியது. ஆனால், ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக இலங்கையை பல நாடுகள் தரப்படுத்தியுள்ளன. இங்கு ஊடகங்கள் மக்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் மிகவும் கடினமாகவே உள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி முகமாலையில் நடைபெற்ற சமர் தொடர்பாக படைத்தரப்புத் தெரிவித்த தகவல்களில் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தியதாகவே தெரிவித்திருந்தது. ஆனால், படை அதிகாரிகளும் படையினரும் இராணுவமே வலிந்த தாக்குதலை நடத்தியதாகவே தெரிவித்திருந்தனர்.
விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்புகளை ஒட்டுக்கேட்ட போது அவர்களின் தளபதிகள் முன்னணி அரணில் உள்ள தமது உறுப்பினர்களை பின்வாங்கும்படி கேட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து படையினர் அவர்களின் அரண்களை கைப்பற்றிய சிறிது நேரத்தில் அவர்களின் மீது அதிகளவில் ஷெல்கள் ஏவப்பட்டன. இந்தத் தாக்குதலிலேயே அதிகளவான படையினர் பலியாகியிருந்தனர்.
100 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதும் 355 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இரத்மலானை விமான நிலையத்திலிருந்து கொழும்பு மருத்துவமனைக்கு காயமடைந்த படையினரை ஏற்றிச்செல்லும் அம்புலன்ஸ்கள் தமது சைரன் ஒலிகளை நிறுத்த வேண்டுமென்ற உத்தரவுகளும் விடுக்கப்பட்டுள்ளன.
களநிலைமைகளின் உக்கிரத்தை இந்த சைரன் ஒலிகளைக்(6ஆம் பக்கம் பார்க்க) கொண்டே வீதியோரங்களில் வசிக்கும் மக்கள் கண்டறிவதுண்டு. மக்கள் இது தொடர்பில் தமக்கிடையில் தொலைபேசியிலும் தகவல்களை பரிமாறுவதுண்டு.
முகமாலைப் பின்னடைவைத் தொடர்ந்து இராணுவம் புதிய படையணியான 61 ஆவது படையணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றது. இந்தப் படையணிக்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன . தற்போது இராணுவம் 8 தாக்குதல் டிவிசன்களைக் கொண்டுள்ளது. 51,52,53,55,56,57,58 (அதிரடிப்படை -1) 59 என்பனவே அவை.
நாட்டுக்குச் சிறந்த சேவையாற்றியதற்காக பல படை அதிகாரிகளை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கௌரவித்திருந்தார். அவர்களில் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவும் அடங்குவார். அவர்களுக்கு "விசிஸ்ர சேவா விபூசணயா" விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த வாரம் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவிக்காலத்தில் விடுதலைப் புலிகளை முறியடிக்கப் போவதாகவும் யாழ்ப்பாணம் , கொழும்பு, அநுராதபுரம் பகுதிகளிலிருந்து ஊடகங்களுக்கு யார் தகவல்களை வழங்குவது என்பதும் தனக்குத் தெரியுமெனவும் தெரிவித்திருந்தார்.
44 மில்லியன் ரூபா பெறுமதியில் தனது பாவனைக்கு வாங்கப்படவுள்ள பென்ஸ் ரக கார் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது நான் ஒரு இராணுவத் தளபதி எனவே, நான் ஆட்டோவில் அல்லது வானில் அல்லது ரொயேட்டர் கொறெல்லர் காரில் பயணம் செய்ய முடியாது. ஏனைய தளபதிகள் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது ஊடகங்கள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. என்னையே அவர்கள் உன்னிப்பாக கவனிப்பதுண்டு எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற சமர்களில் 2000 படையினர் கொல்லப்பட்டதாகவும் 4000 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
முகமாலைச் சமர் நடைபெற்ற நான்கு நாட்களில் விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் மணலாறு படை நிலைகள் மீது 5 குண்டுகளை வீசியுள்ளன. அவற்றில் 2 குண்டுகள் படையினரின் நிலைகளுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளன. இந்தத் தாக்குதலில் சில கட்டடங்களின் கூரைகளும் 6 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.