* ஜனாதிபதி முஷாரப்பையும் சந்திப்பார்
வடக்கே மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை பாகிஸ் தானுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஆறுநாள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் இராணுவத்தளபதி, அங்கு பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பையும் சந்திக்கவுள்ளார்.
வடக்கே நடைபெறும் மோதல்களையடுத்து பாகிஸ்தானிடமிருந்து இலங்கைப் படையினர் அவசர இராணுவ உதவிகளைக் கோரியிருந்தனர்.
பல்லாயிரக்கணக்கான ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் பல்குழல் ரொக்கட்டுகளும் அவசரமாகத் தேவைப்படுவதாக அண்மையில் இலங்கை இராணுவம் பாகிஸ்தானிடம் அவசர கோரிக்கையை விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே, இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று பாகிஸ்தானுக்கான ஆறு நாள் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பை விட முப்படைத் தளபதிகளையும் சிரேஷ்ட படை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பாகவும் இராணுவத் தளபதி முக்கிய கவனம் செலுத்துவதுடன், அது தொடர்பாகப் பேசுவாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாகவும் உயர்மட்டக் குழுவொன்று இராணுவத்தளபதியுடன் பாகிஸ்தான் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இந்தியாவுக்கு ஒரு வாரப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.