திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் சீன அதிகாரிகள் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுக்கள் எவ்வித இணக்கப்பாடுமின்றி சில மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தகுந்த நேரத்தில் அடுத்த சுற்றுப் பேச்சை நடத்துவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருப்பதாக சீன அரசின் செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
சீனாவின் சியான்ஜின் நகரில் தலாய்லாமாவின் பிரதிநிதிகள் லோடி ஜியாரி, கெல்சங் ஜியாட் ஆகியோருடன் சீன அதிகாரிகள் பேச்சு நடத்தினர். மார்ச் 12 ஆம் திகதி லாஸா நகரில் நடந்த வன்முறையால், தலாய் லாமாவுடனான உறவுக்கு புதிய தடைகள் ஏற்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், பொறுமையுடனும் முழுமனதுடனும் இந்தப் பேச்சுக்கு சீனா ஏற்பாடு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பேச்சு 2 முதல் 3 நாள்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக சில மணிநேரத்திலேயே முடிவுக்கு வந்தது.
அடுத்த சுற்றுப் பேச்சு நடத்தப்பட வேண்டுமானால், வன்முறைப் போராட்டங்களை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தலாய்லாமாவுக்கு சீனா நிபந்தனை விதித்துள்ளது.
தலாய்லாமாவின் பிரதிநிதிகள் தர்மசாலாவுக்கு வியாழக்கிழமை திரும்புவார்கள். பேச்சு குறித்த விபரங்களை அப்போது அவர்கள் தலாய் லாமாவிடம் விளக்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.