* பிரதியமைச்சர் நிஜாமுதீன்
சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க உருவாக்கப்பட்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் இன்று சுயநல அரசியலுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது என்று மக்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது கடற்கரை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் உஷா சலீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
பழுக்கும் நேரத்தில் கட்சிக்குள் வந்து சந்தர்ப்ப வாதங்களால் உயர்ச்சிக்கு வந்து முஸ்லிம் காங்கிரஸை உயர்த்துகின்ற அளவுக்கு அவர் உயர்ந்தவர் அல்ல. இந்த மனிதர், தான் தோன்றித் தனமான போக்குகளினால் முஸ்லிம் சமூகத்தை இன்னும் ஒரு சமூகத்திடம் அடகு வைக்கின்ற கூட்டுப் பேச்சு வார்த்தைகளைப் பேசுவதையும் காலம் கடத்துவதிலும் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.
தேர்தல் வருகின்ற போது மடித்துக் கட்டிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தைப் பற்றிப் பேசுவதும் முஸ்லிம் உரிமைகளைப் பற்றி சிந்திப்பதும், பழக்கமாகிக் கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை கிழக்கு மாகாண மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது அவருக்கு இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மறைந்த தலைவர் மரணத்தின் பின்னர் தன்னுடைய மனசு கேட்கிறது. இப்பதவியைத் தாருங்கள் என்று கால்களில் விழுந்து மன்றாடிப் பெற்றுக் கெண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை இன்றைக்கு சர்வாதிகார போக்கின் தான்தோன்றித்தனமான முடிவை எடுப்பதும் வடகிழக்கு முஸ்லிம்களின் வியர்வை, இரத்தம், அச்சுறுத்தல், உயிர்களைப் பலிகொடுத்து நீராக ஊற்றி வளர்த்தெடுத்த முஸ்லிம் காங்கிரஸை வியாபாரக் கம்பனியாகவும் குடும்பத்தின் சொத்தாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.
தனக்கு விரும்பியவர்களையும் ஆமாம்சாமி போடுகின்ற ஆமாம்சாமிகளையும் வைத்துக் கொண்டு மறைந்த தலைவரின் பாணியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை வழிநடத்தலாம் என்றெண்ணி கற்பனை வாதங்களால் கைகளை உயர்த்தி பேசுகின்ற அளவுக்கு மு.கா. தலைமைத்துவம் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளினால் பல தோல்விகள் அடைந்து முஸ்லிம்களை கூறு கூறாக துண்டு போட்டு பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேட முனைகிறது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம்.
மு.கா.விடம் எவ்விதமான உருப்படியான எந்த வேலைத் திட்டமும் கிடையாது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தல் கூட்டமைப்பு பற்றிப் பேசுவதும் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து யானையில் வருவதும், மு.கா. தலைமையின் அரசியல் வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்டுகிறது.
தேர்தல் காலங்கள் வருகின்ற போது முஸ்லிம் உரிமைகள் பற்றியும் தனி இராச்சியம் பற்றியும் சிங்கக் கொடியை பற்றிப் பேசுவதும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு ஒரு சகஜமான விடயம்.
தற்போதைய அரசின் முஸ்லிம் காங்கிரஸ் ஓரிரு நிபந்தனைகளை வைத்துவிட்டு அரசில் இணைந்து முஸ்லிம் சமூக நலனை முன்னிறுத்தி தாம் அரசாங்கத்தில் இணைந்ததாகவும் அதனை அரசு ஏற்க மறுத்ததனாலேயே அரசை விட்டு விலகியதாகவும் வெறும் பசப்பு வார்த்தைகளை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் தீர்த்து வருகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுக் கொண்ட சகல உதவிகளையும் அரசு செய்து கொடுத்தது மட்டுமல்ல. அரையமைச்சு முழு அமைச்சு எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு சந்தர்ப்பவாத வியாபாரத்தினால் அரசை விட்டு விலகிக்கொண்டு முஸ்லிம் உரிமை பற்றிப் பேசுகிறது.
தகுதியும் தொகுதியும் இல்லாமல் வாய்வீச்சுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல் காலங்களில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்களின் வாக்குகளை மொத்தமாகப் பெற்றுக் கொள்வது தான் அவரது கனவாகும்.
இதுதான் முஸ்லிம் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் மிக மோசமான சூழ்நிலைக்கும் வழி வகுத்தது. முஸ்லிம் காங்கிரஸுக்குள் உறுதியான அரசியல் வேலைத்திட்டம் எதுவும் இல்லை. முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு குறித்த மிக மையமான விவகாரத்தில் கூட அதற்கு உறுதியான நிலைப்பாடில்லை.
பேசித் தீர்க்கக் கூடிய சிறு சிறு பிரச்சினைகளை பெரிது படுத்திக் கொண்டு அதை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் ஆதாயம் தேடுவது தான் முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய கொள்கையும் நோக்கமுமாகும்.
முஸ்லிம்களது இருப்பு மனித உரிமைகள் சமூக, பொருளாதார, கலாசார பிரச்சினைகள் போன்றவற்றை பற்றிய ஆழமான கவனமின்மை, பேச்சளவில் மட்டுமே இவற்றைக் கையாண்டு செயலாற்று நிலைக்கு ஆளாகி இருக்கின்றமை இன்று ஒரு மிகப்பெரும் சமூகப் புற்றுநோயாக மாறியுள்ளது.
முஸ்லிம்களின் விவகாரங்களை நுணுக்கமாகவும் அரசியல் தொலைநோக்கோடும் கையாளுகின்றவர்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கட்சியிலிருந்து வெளியே தள்ளிவிடுவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
போதியளவு புதிய தலைமுறை ஆளுமைகளை உள்வாங்க அவர்களது அரசியல் நகர்வில் எந்த இடமும் இருக்கவுமில்லை. அதற்கு எந்தவிதமான முயற்சியும் இதுவரை எடுக்கப்படவுமில்லை.