* அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
மக்களுக்கென தற்போது இருக்கும் நல்ல சூழ்நிலை, நிம்மதியான வாழ்வு என்பவற்றை யானைச்சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் அழித்துக் கொள்ளக்கூடாது. சுபிட்சமான வாழ்வு தொடர்ந்தும் வேண்டுமாயின் உங்கள் தெரிவு தெளிவாக இருக்கவேண்டும், என மகாவலி விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மகாவலி "பி" வலய முகாமையாளர் ரன்ஜித் பெரேரா தலைமையில், பொலன்னறுவை, மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைக் கிராமமான ரிதிதென்னயின் விவசாயிகளுக்கென மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட வைபவத்தில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்; கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடமிருந்து பல போராட்டங்களின் மத்தியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் பயனை மக்கள் அனுபவிக்கவேண்டும். யானைச்சின்னத்திற்கு வாக்களித்தால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நன்மைகளை இழக்க நேரிடும்.
ரணிலும் ரவூப் ஹக்கீமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நண்பர்கள். ஐ.தே.கட்சியினரின் பேச்சுக்களை நம்பி மக்கள் வாக்களித்தால், விடுதலைப் புலிகள் இப் பிரதேசத்திற்குள் வந்து இப்பிரதேச மக்களை மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாக்குவார்கள்.
இப்பிரதேசத்தில் ஆட்கடத்தல், படுகொலைகள், பொருள் சொத்து இழப்புக்கள், கப்பம் பெறுதல் உள்ளிட்ட இன்னும் பலவிதமான ஆபத்துக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
இதுபோன்ற மோசமான விளைவுகளை தொடர்ந்தும் நாம் சந்திப்பது நல்லதுதானா? என்பதை மக்கள் யோசித்துப்பார்க்க வேண்டும்.
கிழக்கு மாகாணம் நல்ல வளங்களையுடைய பிரதேசமாகும். கடந்தகாலங்களில் இப்பிரதேச மக்கள் சுதந்திரமாக நெல் உட்பட ஏனைய பயிர்களை விதைத்து அறுவடை செய்வதற்கோ, பால் உற்பத்திகளை மேற்கொள்வதற்கோ, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கோ பயங்கரவாதம் அனுமதிதரவில்லை.
ஆனால் விவசாயிகள் தற்போது தமது தொழிற்றுறைகளை தடைகள் எதுவுமின்றி மேற்கொள்வதற்கு வழிபிறந்துள்ளது.
இப்பிரதேசத்தின் வீதிகள், மதகுகள், பாலங்கள் உட்பட ஏனைய புனருத்தாபன வேலைகளையும் தென்பகுதி பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை வரவழைத்து விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்.
யானைச்சின்னத்திற்கு மக்கள் புள்ளடியிட்டால் எமது பொறியியலாளர்கள் வரமாட்டார்கள், மாறாக பிரபாகரனின் ஆட்களே இப் பிரதேசத்திற்கு வருவார்கள்.
இந்த நிலையினை இப்பிரதேச மக்கள் ஏற்படுத்திவிடாமல் நெல், தென்னை உட்பட ஏனைய பயிர் இனங்களையும் வளர்த்து, கால்நடைகளின் உற்பத்தி, மீன்பிடித் தொழில் போன்றவைகளிலும் ஈடுபட்டு முழு நாட்டிற்கும் தேவையான உணவினை வழங்குவதற்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றார்.