* அமைச்சர் நவீன் குற்றச்சாட்டு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடத்தின் முறையற்ற நிர்வாகத் தன்மையே கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைக் கருத்தில் கொண்டே ஐ.தே.க.வைச் சேர்ந்த 17 பேரும் அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
நுவரெலியாவில் அண்மையில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் முன்னாள் சமுர்த்தி அமைச்சரும் ஐ.தே.க. அதிருப்தி குழு செயலாளருமான ஆர்.ஏ.டி. சிறிசேன உட்பட ஐ.தே.க. ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
நவீன் திஸாநாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
நான் 1999 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் பாத்தத்தும்புர தொகுதிக்கு ஐ.தே.க. அமைப்பாளராக இருந்தேன்.
எனது தந்தை காமினி திஸாநாயக்க மறைந்த பின் நுவரெலியா தொகுதிக்கு அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டில் நுவரெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் இங்குள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்போ அல்லது காணியோ எம்மால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
எமது மக்களுக்கு சேவை செய்வதற்கு அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை.
ஆனால், இன்று அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அன்று நாங்கள் இந்த கட்சியை வளர்ப்பதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்ட போதிலும் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கே ரணில் விக்கிரமசிங்க முக்கியத்துவம் வழங்கினார். நான் ஆறுமுகம் தொண்டமானுக்கு தலைவணங்க மாட்டேன்.
அதேவேளை, இன்று எஸ்.பி. திஸாநாயக்க இந்த அரசாங்கத்துடன் இருந்திருந்தால் மிக முக்கிய அமைச்சுப் பதவி வழங்கி மக்களுக்கு சேவை செய்ய ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியிருப்பார்.
ஆனால், இன்று அவர் ஐ.தே.க.வில் இணைந்துள்ளார். அவரையும் ரணில் விக்கிரமசிங்க வளரவிட மாட்டார்.
மேலும் டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன, ரனசிங்க பிரேமதாச, காமினி திஸாநாயக்க ஆகியோர் இந்த கட்சியில் இருந்த பொழுது ஐ.தே.க. ஒரு சக்தியுள்ள கட்சியாக இருந்தது.
ஆனால், இன்று அந்த சக்தியை இழந்துள்ளது. கிழக்கு மாகாண தேர்தலின் பின் பொதுத் தேர்தல் வரும் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றார்கள்.
ஆனால், பொதுத் தேர்தல் 2011 ஆம் ஆண்டுதான் நடக்கும். அதுவரை நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் எமது மக்களுக்கு சேவை செய்ய முடியாது. இதனாலேயே நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றோம் என்றும் தெரிவித்தார்.