வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று வீடுகளில் ஆயுதபாணிகள் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வவுனியாவுக்கு மேற்கே கூமாங்குளத்தில் அடுத்தடுத்திருக்கும் மூன்று வீடுகளினுள் இரவு 7 மணியளவில் நுழைந்த ஆயுதபாணிகளே இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
முகத்தை கறுப்புத் துணிகளால் கட்டியவாறு ஆயுதங்கள் சகிதம் மேற்படி வீடுகளினுள் நுழைந்த ஐந்து கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
குடும்பத் தலைவர்களே இவர்களது பலத்த தாக்குதலுக்குள்ளானார்கள். இதன் பின் வீடுகளிலிருந்தவர்களை ஆயுதமுனையில் அறைகளுக்குள் கொண்டு சென்று அடைத்துவிட்டு வீடுகளிலிருந்த பணம், நகைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடந்த ஓரிரு மாதங்களாகக் கட்டுப்பாட்டிலிருந்த இரவு நேரக் கொள்ளை மீண்டும் தலைதூக்கியுள்ளது குறித்து மக்கள் மத்தியில் பெரும் அச்சமேற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.