கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசங்களில் வைத்து அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அரசதரப்பு பிரமுகர்களைக் கொல்வதற்காக இதுகாலவரை பல்வேறு திட்டங்களை இட்டும், அவ்வாறு கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டும் வரும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தற்போது மத்திய மாகாணத்திலும் அவ்வாறான கொலைத் தாக்குதல் திட்டங்கள் மூலம் மத்திய மாகாண அரசதரப்பு உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள், பாதுகாப்பு புலனாய்வு உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு பிரமுகர்களைக் கொல்லும் நோக்கத்தில் மத்திய மாகாணப் பிரதேசங்களில் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இரகசிய திட்டங்களை ஏற்பாடு செய்வதற்குத் தேவைப்படும் தகவல்களைச் சேகரிப்பதற்காக பெருந்தோட்டப் பகுதிகளில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் நடமாடி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தகவல்களைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் வைத்து மேற்படி இரகசியத் தகவல்களைச் சேகரிப்பவர்கள் எனக் கருதப்படும் 12 புலிகள் இயக்க நபர்களை கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் கடந்தவாரம் கைதுசெய்துள்ளனர். இதுபற்றி பொலிஸ் திணைக்களத் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப மேற்படி மத்திய மாகாணத்தில் புலிகள் இயக்கத்தினர் கொலைத் தாக்குதலை நடத்துவதற்கு வேண்டிய தகவல்களைச் சேகரித்துவருவதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த விபரங்களுக்கு ஏற்ப கண்டி, திகன, நாவலப்பிட்டி, நுவரெலியா, கந்தப்பொல, பத்தன ஆகிய பிரதேசங்களில் தீவிர சோதனை மற்றும் தேடுதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதன்போது அவ்வாறு புலிகளுக்காகத் தகவல்கள் சேகரிப்பவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட மேற்படி 12 நபர்களையும் கைது செய்ய முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அவர்கள் 12 பேரும் சில வருடங்களுக்கு முன்னர் அடிக்கடி கிளிநொச்சிக்குச் சென்று புலிகள் இயக்க முகாம்களில் ஆயுதப்பயிற்சி, வெடி குண்டுத் தயாரிப்பு மற்றும் தாக்குதல் முறைகள், மற்றும் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் பயிற்சி உட்பட அனைத்து யுத்தப் பயிற்சிகளையும் பெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக மேலும் மேற்படி சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
மேலும், அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின்படி தி.மு. ஜயரத்ன, சி.பி. இரத்நாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, நவீன் திசநாயக்க, மகிந்தானந்த அலுத்கமகே ஆகிய அமைச்சர்களையும், நுவரெலியா ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், ஈ.பி.டி.பி. பிரமுகராகிய பத்தன பிரதேசத்தில் வசிக்கும் கந்தசாமி நயாது, பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர், பொலிஸ் பரிசோதகர் சுகத் பொன்சேகா, தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.எம். போவல, இராணுவ புலனாய்வு அதிகாரி மஜீத் ஆகிய பிரமுகர்களைக் கொலை செய்வதற்காக இரகசியத் திட்டங்களை புலிகள் இயக்கம் இட்டிருப்பது பற்றித் தெரியவந்துள்ளது.
கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களால் இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் இவ்வாறு மத்திய மாகாணப் பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஏற்கனவே 12 புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் உட்பட 24 நபர்களிடமும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப : 03.05.2008