* ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர்
பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கிழக்கை மீட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஜனாதிபதி வழிசமைத்துள்ளார். இதன் மூலம் கிழக்கு வாழ் மக்கள் இழந்திருந்த தன்மானத்தை மீளப் பெற்றுள்ளனர். இணைந்த மாகாணத்தினுள் 17 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் கிழக்கு மீட்கப்பட்ட பின்னர் அவர்களின் சனத்தொகை 41 சதவீதமாகக் கணிப்பிடப்படுகின்றது. இன்று மக்கள் கிழக்கு மாகாணமெங்கும் சுதந்திரமாக அச்சமின்றி சென்றுவரக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தேர்தலை நடாத்த முடிந்துள்ளது என ஜனாதிபதியின் ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
ஐ.ம.சு.மு. சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, காத்தான்குடி அன்வர் பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையிலேயே அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேல்மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யத் அலவி மௌலானாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:
தரிசு பற்றி வறண்டுபோயிருந்த வயல் நிலங்கள் இன்று நெல் முத்துக்களை வாரி வழங்கியுள்ளன. எல்லோருடைய வீடுகளிலும் நெல் மூடை மூடையாக அடுக்கப்பட்டுள்ளது. பாதைகளில் அச்சமின்றி சுதந்திரமாக நடமாட முடிகின்றது. 34 பௌத்த பிக்குகள் அறுத்துக் குதறப்பட்ட அரந்தலாவை ஊடாக நிம்மதியாகப் பயணம் செய்ய முடிகின்றது. பல்லாயிரம் மனித உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு சூழலில் நடைபெறுகின்ற இந்த மாகாண சபைத் தேர்தலை முஸ்லிம் உலகம் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.
இன்று இந்நாட்டில் முஸ்லிம்களுக்கென தனியான மாகாண சபை ஒன்று உள்ளதென்றால் அது கிழக்கு மாகாண சபையே. இந்தத் தேர்தலின் மூலம் இந்நாட்டின் ஒரேயொரு முஸ்லிம் முதலமைச்சர் உருவாகப்போகின்றார். இதனையிட்டு அண்மையில் நம்நாட்டுக்கு விஜயம் செய்த ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அக்மத் நஜாதி மிகுந்த சந்தோஷமடைந்தார். அவரது விஜயத்தினால் 42 ஆயிரம் கோடி ரூபா நம் நாட்டுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது இதேபோன்று மத்திய கிழக்கு அரபு நாடுகளும் இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சமாதான சூழல் காரணமாக உதவி வழங்குவதற்கு ஆர்வமாக உள்ளன.
ரவூப் ஹக்கீம் புலிகளின் தலைவரோடு ஒப்பந்தம் செய்தார். பின்னர் புலிகள் வாழைச்சேனையில் அவர் முன்பாகவே முஸ்லிம்களைக் கொன்று எரித்தனர். இவ்வாறு அவர் சென்ற இடங்களிலெல்லாம் முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்துப் பிழைப்பு நடாத்திக்கொண்டு வருகின்றார்.
ஐ.தே.க. என்ற வாகனத்தின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை நான் அந்த வாகனத்தில் ஏறமாட்டேன் என்று சொன்ன முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் சபதத்தைத் தூசாக மிதித்துவிட்டே ரவூப் ஹக்கீம் இன்று ஐ.தே.க. வாகனத்தில் பவனி வருகின்றார். இது அந்தக் கட்சிக்கும், அதனை வளர்த்தவர்களுக்கும், அதன் தலைவருக்கும் செய்கின்ற பெரும் துரோகமாகும்.
காத்தமா நகரைக் கட்டியெழுப்பி அதன் புகழை உச்சாணிக்குக் கொண்டு சென்றவர் ஹிஸ்புல்லாஹ். அவரை நான் அன்றும் இன்றும் என்றும் விமர்சிப்பதில்லை. ஏனெனில், அவர் மண்ணைப் பொன்னாக்கும் செயல் வீரர் பாதைகள், பாடசாலைகள், மண்டபங்கள், வரவேற்பு வளைவுகள் என காத்தமா நகரின் அனைத்துத் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்து வைத்துள்ளார். மீண்டுமொருமுறை அத்தகைய மின்னல்வேக அபிவிருத்தியை இம்மண் காணவேண்டும். அதற்காகவே ஹிஸ்புல்லாஹ் இன்று மாகாண சபைக் களத்தில் குதித்துள்ளார். அவரது வெற்றியைக் காத்தான்குடி மக்கள் என்றோ ஊர்ஜிதப்படுத்திவிட்டனர் எனத் தெரிவித்தார்.
பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ காத்தான்குடி ஷ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் ரவூப் ஹாஜியார், ஜே.வி.பி. முன்னாள் அங்கத்தவரும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான எஸ். அமரசிங்க, ஏ.எஸ்.எம். ஹில்மி, சட்டத்தரணி ரூபி, அஸ்லம் குறைஷ், ஜபல் தரீக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.