* ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் சல்மா ஹம்ஸா
நமது சமுதாயத்தின் தலைவிதியினை நிர்ணயம் செய்யும் தேர்தல் இது என்பதால் சிலரின் தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாந்துவிடாமல் நமக்கு நிம்மதியான வாழ்க்கை சூழலினை இப்பிரதேசத்தில் ஏற்படுத்தித் தந்த அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே மக்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.
இவ்வாறு இலங்கை ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைக்கென ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஏறாவூர் ஐயன்கேணி கிராமத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரமுகர் செய்யது இப்றாகீம் மஹ்றூப் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சல்மா ஹம்ஸா தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில் ; மாகாண சபையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து கொண்டு நாம் எதனையும் செய்ய முடியாது.
அரசாங்கத்தின் சின்னமான வெற்றிலைக்கு வாக்களிப்பதன் மூலமே மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
நம் எல்லோருக்கும் கிழக்கு மாகாணத்தில் நிம்மதியான சூழலை ஏற்படுத்தித் தந்தது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களும் எவ்வித பகைமையுணர்வுகளும் இன்றி தமது சொந்த தாயக மண்ணில் என்றென்றும் ஐக்கியமாக வாழ வேண்டும். வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் இம் மக்களின் நிம்மதி குலைவுக்கு அது வழி வகுத்துவிடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
நமது மக்களின் நிலையான இருப்பு, வாழ்விட உரிமைகள் பாதுகாப்பு, சுதந்திரம் உட்பட அனைத்துக் காரணிகளையும் முன்னிலைப்படுத்தும் தேர்தலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைந்துள்ளது.
நமது சொந்த விருப்பு வெறுப்புக்களை உதறித் தள்ளிவிட்டு மக்களின் சிறந்த வாழ்க்கைத் தர உயர்வுகளுக்காக அயராது பாடுபடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில் மக்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இதன் மூலமே நீண்டகாலமாக மக்கள் இப்பிரதேசத்தில் தொலைத்து விட்டுத் தேடும் மகிழ்ச்சி, மனநிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மீளப்பெற முடியும். சந்தர்ப்பம் உணர்ந்து மக்கள் நடந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.
பெண்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஜனாதிபதி மகிந்த கடுமையாக உழைத்து வருகின்றார். அவரின் நன்நோக்குள்ள பல்வேறு திட்டங்களுக்கும் நாம் உதவிக்கரம் நீட்டும் வகையில் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியடையச் செய்வோம் என்றார்.