* ஜனாதிபதி ஆணைக்குழு முன் பொலிஸ் அதிகாரி சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
திருகோணமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் நகரை மீட்டெடுக்கப் போவதாகக் கூறியதாக மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூதூரில் படுகொலை செய்யப்பட்ட `அக்ஷன் பாம்' ஊழியர்கள் படுகொலை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஆகஸ்ட் முதல் வாரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்விசாரணையின் தொடர்ச்சியாக நேற்று இடம்பெற்ற 17ஆவது அமர்வில் 12ஆவது சாட்சியாக வந்த மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் திகதி விடுதலைப் புலிகளால் மூதூர் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போது ஞானதிலக என்ற பொலிஸ் அதிகாரி பலியானதுடன், ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
தாக்குதலில் காயமடைந்தவர் படகொன்றின் மூலம் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.
இவர்களிருவரும் கடமையிலிருந்த பதுங்குகுழி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே இருவரும் கொல்லப்பட்டனர்.
இதேவேளை நகரப் பொலிஸ் சோதனை நிலையத்தில்தான் கபிர் கடமையிலிருந்தார். இவருடன் காமினி, நவரத்ன ஆகியோரும் கடமையிலிருந்தனர். ஏனையவர்களின் பெயர்கள் இப்பொழுது எனக்கு ஞாபகமில்லை.
இரண்டாம் திகதி காலை 9 மணிக்குத்தான் இவர்கள் நகரப் பொலிஸ் சோதனை நிலையத்திற்கு எமது பொலிஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றையதினம் நண்பகல் 12 மணிக்கே திரும்பி வந்துவிட்டனர். அத்துடன் அங்கு தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ்காரரையும் கூட்டிக்கொண்டு வந்தனர்.
ஆனால், அவர்களுடன் பாக்கியராஜா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் திரும்பி வரவில்லையெனத் தெரிவித்தனர்.
மேலும் அக்ஷன் பாம் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் இரண்டையும் கபீரும் மற்றொரு அதிகாரியும் எடுத்துவந்தனர்.
ஆகஸ்ட் மூன்றாம் திகதி படகு மூலம் வந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பிரிவினர் மூதூர் பொலிஸ் நிலையத்தை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
நாங்களும் அவர்களின் தாக்குதலுக்கு எதிராக பதில் தாக்குதல்களை மேற்கொண்டோம்.
வங்குவர் பொலிஸ் சாவடிக்கு வலப்பக்கமாக இறால்குழிப் பக்கமிருந்தே விடுதலைப் புலிகள் படகு மூலம் வந்தனர்.
பதுங்குகுழி இலக்கம் 1 அ க்கு 100 மீற்றர் தொலைவில் இருந்தே படகிலிருந்த வண்ணம் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன்போதே ஞானதிலகவும், கபீரும் காயமடைந்தனர் பின்னர் இறந்தனர்.
விடுதலைப் புலிகளின் படகு பின்னர் எமது பொறுப்பிலேயே இருந்தது.
இதேவேளை, கட்டைபறிச்சான் இராணுவ முகாமும் கடற்படை முகாமும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதையும் அறிந்தேன்.
அன்றையதினம் எமது பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருந்தபோது கட்டைபறிச்சான் இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை ஷெல் வீச்சுகள் மற்றும் ஏனைய வெடிச்சத்தங்கள் மூலம் அறிய முடிந்தது.
இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் திகதி விமானப்படையினர் வான்வழித்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது மூதூர் பொலிஸ் நிலையத்தைச் சுற்றிய பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் நின்றுகொண்டிருந்தனர்.
அத்துடன், மூதூர் நகரத்திலிருந்த மக்கள் கந்தளாய்ப் பகுதியூடாக நகரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் திருகோணமலையிலுள்ள உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டு எம்மை மீட்டெடுக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
மூன்றாம் திகதி நண்பகல் 12 மணிக்கும் இரண்டு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு குழுவினர் எமது பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தனர்.
ஒன்பதாம் இலக்க பதுங்குகுழியிலிருந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே குழு ஒன்று வருவதாகவும் அவர்களைப் பொலிஸ் நிலையத்தினுள்ளே ஏற்குமாறும் கூறினார்.
அதன் பின்னர் தான் வந்தவர்கள் இராணுவ கொமாண்டோ அணியினரென எனக்குத் தெரியும்.
அவர்களில் முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையானோர் இருந்தனர்.
அத்துடன், அவர்களில் மேஜரொருவரும் கப்டன் ஒருவரும் இருந்தனர்.
அவர்கள் இறங்குதுறைப் பக்கமிருந்தே மூதூர் நகருக்குள் வந்தனர்.
அதேவேளை, மூதூர் நகரை விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருந்ததுடன், மூதூர் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருந்தது.
திருகோணமலையிலிருந்து வந்த குழுவினர் ரி-56, எல்.எம்.ஜி, மோட்டார் ஆயுதங்கள், எம்.ரி.எம்.ஜி. ஆயுதங்கள் வைத்திருந்தனர்.
அதனுடன் அங்கு வந்த படையினர் குழு, விடுதலைப் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாகக் கூறினார்கள்.
மறுநாள் காலை நான்கு மணிக்கு இக்கொமாண்டோ குழுவினரில் சிலர் மூதூரை மீட்பதற்காக புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், சிரஞ்சீவவுடன் சேர்த்து பத்துப்பேர் பொலிஸ் நிலையத்திற்கு பாதுகாப்பாக இருந்தனர்.
அத்துடன் இப்படையினர் யாழ்ப்பாணத்தில் கடமை புரிந்தவர்களென்றும் மூதூர் நகரை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக அங்கு வரவழைக்கப்பட்டனரென்றும் அவர் தெரிவித்தார்.