* அமைச்சர்கள் விசனம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எதிர்க் கட்சிகள் அரசாங்கத்திற்கெதிரான தவறான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருக்கும் அரசு, கிழக்கு மாகாண அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றுவது உறுதியெனவும் சூளுரைத்துள்ளது.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்க அமைச்சர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இங்கு அமைச்சர் நிமால் சிறிபால டீ. சில்வா கருத்துத் தெரிவிக்கையில்;
கிழக்குத் தேர்தலுக்கான வாக்களிப்பு 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்வாக்களிப்பு நடைபெறும் முன்னமே மோசடி நிகழுமென எதிர்க்கட்சிகள் ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது. இது இயற்கை விதிமுறைகளுக்குக்கூட முரணானது.
ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. முன்று எதிர்க்கட்சிகளும் இணைந்து அரசாங்கத்திற்கெதிரான தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறான பிரசாரத்திற்கு சில தனியார் ஊடகங்களும் பங்களிப்புச் செய்கின்றன.
புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென விரும்புகின்றனர். ஆட்சியிலிருக்கும் அரசாங்க வசம் கிழக்கு மாகாண நிர்வாகம் வருமாயின் அங்கு மேலும் அபிவிருத்தியை முன்னெடுக்கலாமென்றார்.
இங்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்துத் தெரிவிக்கையில்;
கிழக்கில் சகல கட்சிகளும் சுதந்திரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. கொழும்பிலிருந்துகொண்டு தேர்தல் சுதந்திரம் குறித்து கருதுவதில் பயனில்லை. போலியான கருத்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கி ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துவது கண்டிக்கத்தக்கது.
முப்படையினரைத் தவிர கிழக்கில் எவரும் ஆயுதங்களுடன் நடமாடவில்லையென்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது. ஜனநாயகத்தை நேசிக்கும் நாம் ஜனநாயக வழிக்குத்திரும்பிய பிள்ளையான் குழுவுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவதை எவருமே கேள்விக்குட்படுத்த முடியாதென்றார்.
இங்கு ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்துத் தெரிவிக்கையில்;
கிழக்கு புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பயனை இன்று ஐ.தே.க.யினரும் அனுபவிக்கின்றனர். அதனால்தான் அவர்கள் கிழக்குக்கு விஜயம் செய்து சுதந்திரமான தேர்தல் பிரசாரத்தில் கூட ஈடுபடமுடிகிறது.
ஐ.தே.க.ஆட்சிக்காலத்தில் இருந்தபோது எதிரணி எம்.பி.க்களினால் சுதந்திரமாக அங்கு செல்லமுடிந்ததாவென கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.
தவறான பிரசாரங்கள் மூலம் கிழக்கு அதிகாரத்தை கைப்பற்றத்துடிக்கும் ஐ.தே.க - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியை தோல்வியடையச்செய்து அபிவிருத்திமூலம் சமாதானத்தைக் காண அணிதிரளுமாறு அரசாங்கம் கிழக்கு மாகாண மக்களுக்கு அழைப்பு விடுக்கிறதென்றார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்டனர்.