* நீதி, சுதந்திர தேர்தலுக்கான மக்கள் இயக்கம்
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாணத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (campaign for free and fair elections) நியாயமான தேர்தலுக்குரிய வாய்ப்புக் குறைவானதாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த இயக்கத்தினர் ஆயுதங்களுடன் வந்து தமிழர் வீடுகளில் அச்சுறுத்துவதாகவும் மேற்படி கண்காணிப்புக்குழு குறிப்பிட்டிருக்கின்றது. பிள்ளையான் குழுவினரின் 90 சதவீதமானோர் ஆயுதங்களுடனேயே நடமாடுவதாகவும் பொலிஸாரும், படைத்தரப்பும் இதனைக் கண்டு கொள்ளாமலிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.
தேசிய நூலகச் சேவைகள் நிலையக் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்க (இச்ஞூஞூஞு) தின் விஷேட செய்தியாளர் மாநாட்டில் அதன் நிறைவேற்றுக்குழு முதன்மை அதிகாரி சட்டத்தரணி ஷிரால் லக்திலக்கி மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நாள் முதல் படிப்படியாக வன்முறைகளும், கொலை அச்சுறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களும் பிள்ளையான் குழுவுமே மிகமோசமாக நடந்துகொள்வதை எம்மால் நேரடியாகவே காணக்கூடியதாக இருந்தது. அங்கு மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் தினத்தன்று ஜனநாயக முறையில் தமிழ் மக்களால் வாக்களிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தின்படி
சட்டம் சகலருக்கும் சமமானது என்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கின்றோம். தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு குழு ஆயுதங்களுடன் நடமாட அனுமதித்தால் அது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலாகவே காணப்படும்.
கிழக்கில் இன்று வன்முறைகள் மிக மோசமாக அதிகரித்து வருகின்றன. பிள்ளையான் குழுவினரின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முறையிடப் போனாலும் கூட பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்காமல் புறக்கணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வன்முறைகள் குறைவு என்பதை சர்வதேசத்துக்குக் காட்டவே அரசு முனைகின்றது.
அடுத்து வரும் நாட்கள் அச்சம் நிறைந்ததாகவே மக்கள் பார்க்கின்றனர். நியாயமான தேர்தலுக்குரிய களநிலைமை கிழக்கில் காணப்படவில்லை. இது தொடர்பிலான பூரணமான விளக்கத்தை நாம் தேர்தல் ஆணையாளரிடம் விபரித்துள்ளோம்.
ஏனைய கண்காணிப்புக் குழுக்களைப் போன்று தேர்தல் முடிவுற்றதும் அறிக்கைகளை வெளியிட்டு எமது பணியை மட்டுப்படுத்திக் கொள்ள நாம் தயாராகவில்லை. அதற்கப்பால் சில காத்திரமான பணிகளை முன்னெடுக்கவிருக்கின்றோம். மக்களின் ஜனநாயக வாக்குரிமையை பாதுகாத்துக் கொடுக்க சட்ட ரீதியிலான சில முயற்சிகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கின்றோம். நீதித்துறையின் அதிகாரத்தை மலினப்படுத்தாமல் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சில நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ளவிருக்கின்றோம்.
சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில் கூறியதவாது;
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிப்பு தினத்தில் எமது அமைப்பு 500 பேரை கண்காணிப்புப் பணிகளிலீடுபடுத்தவிருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் இத் தேர்தலில் அக்கறை காட்டவில்லை. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினதும், மட்டு. மாநகர முதல்வரினதும் ஆதிக்கமே அங்கு மேலோங்கி காணப்படுகின்றது. தமிழ் மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் இருக்கும் மக்களை கட்டாயப்படுத்தி கூட்டங்களுக்கு அழைத்து வருவதாகவும் அச்சுறுத்தலுக்குப் பயந்தே அவர்கள் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் தெரிய வந்துள்ளது.
அரசும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும் பிள்ளையானை தென்னிந்திய சினிமாப் படங்களில் வரும் கதாநாயகன் விஜய்யைப் போன்று காட்ட முனைகின்றனர்.
இத் தேர்தலில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரியவில்லை.
இச் செய்தியாளர் மாநாட்டில் கீர்த்தி தென்னகோன், அசங்கி சேனகவத்தேகெதர ஆகியோரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.