பி.ரவிவர்மன்
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கோட்டை ரயில் நிலையம் முன்பாக விசேட அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
உலக ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கோட்டை ரயில் நிலையம் முன்பாகவுள்ள தரையில் 'இலங்கை ஊடகவியலாளர்களுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்து' என்ற மும்மொழியிலான வாசகங்கள் அடங்கிய பதாகையொன்று வைக்கப்பட்டிருந்தது.
அதனைச் சுற்றிலும் நூற்றிற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சுற்றி நின்று இலங்கையில் உயிரிழந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மெழுகுதிரி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் இலங்கையில் இதுவரை காலமும் உயிரிழந்த அனைத்து ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு அமைதியாக அஞ்சலி செலுத்தினர்.
ஊடக அடக்கு முறைக்கெதிரான இயக்கம் என்ற பொதுக்கட்டமைப்பின் கீழ் செயற்படும் ஐந்து பிரதான ஊடக அமைப்புகளே இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த அஞ்சலிக்கூட்டத்தில் சுதந்திர ஊடக அமைப்பின் தலைவர் சுனந்த தேசப்பிரியா, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் போத்தல ஜயந்த, செயலாளர் சனத் ஜெயசூரிய, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.பாரதி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
அதேநேரம் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை நேற்றுக்காலை ஊடக அடக்கு முறைக்கு எதிரான இயக்கம் கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஊடக சுதந்திரத்தின் அவசியம் மற்றும் அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்பது தொடர்பான துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தது.
இந்தத் துண்டுப்பிரசுரத்தில் 14 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை, 8பேர் கடத்தப்பட்டமை, 4பேர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டமை,5 அலைவரிசைகள் தடைசெய்யப்பட்டமை, ஒரு இணையத்தளத் தடை, 3 பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டமை, 3 அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை உட்பட பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.