வர்த்தகர் ஒருவரை கடத்தியமை தொடர்பான வழக்கில் பிரதிவாதிகளான ஓய்வு பெற்ற விமானப்படை விங்கொமாண்டர் நிஸாந்த கஜநாயக்க உட்பட ஐவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
குறிப்பிட்ட 5 பிரதிவாதிகளையும் எதிர்வரும் 11ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில்ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு யூலை மாதம் சீனி வர்த்தகரான நடராஜா சிறீஸ்கந்தராசாவை கொழும்பில் வைத்து கடத்த முயற்சி செய்தமை, அவரையும் அவரது சாரதியையும் கடத்தியமை, 60இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இந்த ஐவருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
விங்கொமாண்டர் கஜநாயக்க, சமிர, இந்திக்க இலாகவத்த, டபிள்யூ. எம். சம்பத் சுகிராஜ், கே.ஜே.ஜெயசிறி கொடிதுவக்கு, பூபாலபிள்ளை கந்தராஜா ஆகியோருக்கு எதிராகவே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் முதல் சாட்சியாளராக விமானப் படை அதிகாரியான ஹேமந்த தேசப்பிரிய குறிப்பிடப்பட்டுள்ளார்.
நீதவானுக்கு அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் பிரகாரம் கருணா தரப்பினரின் ஆலோசனைக்கமையவே இந்த ஆட்கடத்தல் நடைபெற்றதாக குற்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.