வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் ஊவா மாகாண சபை காரியாலய முன்றிலில் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு மறியல் போராட்டமும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.
இவ்வார்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சுஜிவ குமார தெரிவித்தார்.
ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி, கல்வியமைச்சு மற்றும் அமைச்சின் செயலாளர்கள், ஆளுநர், மாகாண முதல்வர் என பலருக்கு அறிவித்தும் அவர்களிடமிருந்து உரிய பதில் கிட்டாத நிலையிலேயே இம்மறியல் போராட்டம் இடம்பெறவுள்ளது.
பட்டதாரிகளின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படுமாயின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுமார் 1598 வேலையற்ற பட்டதாரிகள் தொழிலுக்காக பதிவு செய்து காத்திருக்கும் அதேவேளை, கல்வித்துறையில் 1,200 வெற்றிடமும் நிருவாகத்துறையில் 2,000 வெற்றிடமும் நிலவுகிறது.
2007 ஆம் ஆண்டு வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுத்தரும் போட்டிப் பரீட்சையில் கலந்துகொண்டபோது வயம்ம, சப்ரகமுவ மாகாணத்தவர்களுக்கு மாத்திரமே தொழில் வழங்கப்பட்டுள்ளமையானது ஊவாவில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.
இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பட்டதாரிகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், சங்கத்தின் சார்பில் மகஜர் சமர்ப்பிக்கப்படவுள்ளது.