வவுனியா பூந்தோட்டம் சந்தியில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயமடைந்தார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்த இவ்விருவர் மீதும் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தரான செல்வராஜா பவான் (45 வயது) என்பவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், அவருடன் வந்த மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதலை நடத்தியோர், புளொட் உறுப்பினர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இவர்கள் மீது ஏ.கே-47 ரக துப்பாக்கியாலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற மாவட்ட நீதிபதி விசாரணைகளை நடத்தியுள்ளார்.
கொல்லப்பட்டவரது சடலம் வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.