* சபையில் பிரதமர் விக்கிரமநாயக்கா அறிவிப்பு
மடுத் தேவாலயத்தை இராணுவத்தினர் கைப்பற்றியதற்கு பதிலடியாக பிலியந்தலையில் பயணிகள் பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் சிங்களவர்கள் தொடர்புபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க விசாரணைகள் நடைபெற்று வருவதால் இதுகுறித்த மேலதிக விபரங்களை வெளியிட முடியாதெனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது;
இந்த நாட்டிலுள்ள பயங்கரவாதிகளுக்கு பல்வேறு சக்திகள் உதவிகளை வழங்கி வருகின்றன. இவர்களுக்கு உதவும் நபர்கள் நிறுவனங்களென பலவுண்டு. இவற்றுக்கெதிராக நாம் சர்வதேச ரீதியில் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.
இந்த பயங்கரவாதிகளை அழித்தொழிப்பதென்பது தனிப்பட்ட ரீதியில் செய்யக்கூடியதல்ல. இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புகள் தேவை. மக்களின் ஒத்துழைப்புடன் நாம் பல முனைகளில் போராடி வருகின்றோம். இவற்றில் எமக்கு பல வெற்றிகளும் கிடைத்துள்ளன.
அண்மையில் மடுமாதா தேவாலயத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவித்தோம். இப்போது அந்தத் தேவாலயத்தை படையினர் பாதுகாத்து வருகின்றனர். மடுமாதா தேவாலயத்தைப் படையினர் கைப்பற்றியதற்கு பதிலடியாகவே பிலியந்தலயில் பயணிகள் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் நடத்தி அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்தக் குண்டுத் தாக்குதலுடன் சிங்களவர்களே தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியவில்லை.
பிலியந்தலத் தாக்குதல் போல் பல தாக்குதல் திட்டங்கள் நடத்தப்படவிருந்தமை எமது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் எமக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கினர்.
பயங்கரவாதிகள் தம்மை காப்பாற்றிக் கொள்ளும் இறுதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே அண்மையில் மணலாறில் விமானத் தாக்குதலை நடத்தினர். கடந்த மாதம் மட்டும் முப்படையைச் சேர்ந்த 121 பேர் உயிரிழந்தும் 745 பேர் காயமடைந்துமுள்ளனர். பொதுமக்களில் 56 பேர் கொல்லப்பட்டும் 145 பேர் காயமடைந்துமுள்ளனர். இந்தக் கணக்குகளை நிறுத்துவதற்கான காலம் வந்துவிட்டது. அதற்கான நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மீட்கப்பட்டு இன்று அங்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்பகுதி மக்கள் பயங்கரவாதிகளை எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலை விரைவில் வடக்கிலும் ஏற்படும். அதற்கான நடவடிக்கைகளில் இராணுவத்தினர் இறங்கியுள்ளனர்.