* வெளிநாட்டு செய்திச்சேவை
சூறாவளியும் பெரும் புயல் காற்றும் மியன்மாரில் (பர்மா) சுமார் 15 ஆயிரம் பேரை பலியெடுத்தும் 30 ஆயிரம் மக்களை இருக்கும் இடம்தெரியாமல் காணாமற் செய்தும் கோர தாண்டவமாடியிருக்கும் நிலைமையில் அந்த நாட்டின் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் பிராந்தியத்திலும் மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உலக உணவுத் திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை செய்திருக்கிறது.
மியன்மாரின் ஐராவாடி கழிமுகப்பகுதியை சூறாவளி சின்னாபின்னமாக்கியுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாமென அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில், பின்தங்கிய பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
பொக்காலே என்ற ஒரு பட்டினப் பகுதியில் மாத்திரம் புயலால் 10 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் நியான் வின் அரச தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்திருக்கிறார். 1991 இல் பங்களாதேஷில் 1 இலட்சத்து 43 ஆயிரம் பேரை காவு கொண்ட சூறாவளி அனர்த்தத்தின் பின் ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் பாரிய இயற்கை அனர்த்தமாக மியன்மாரில் இடம்பெற்றுள்ள பேரழிவு காணப்படுகிறது.
இதேவேளை, பாங்கொக்கிலுள்ள மியன்மார் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் றப்பாடொல் பட்டாமா 30 ஆயிரம் பேர் காணாமற்போயிருப்பதாக கூறியுள்ளார்.
`நர்கீஸ்' என்ற சூறாவளியுடன் வீசிய கடும் புயற்காற்றானது மணிக்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளது.
இதேவேளை, நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்ச் செய்கை நாசமாகியுள்ளது. உப்பு நீர் வெள்ளத்தில் கலந்து வயலுக்குள் சென்றுள்ளதால் நீண்டகால அடிப்படையில் பயிர் செய்கைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
வெள்ளத்தாலும் புயலாலும் பல பகுதிகள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் துண்டாடப்பட்டுள்ளதால் சேத மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் மியன்மாரின் அரிசி ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடம் தென்கிழக்காசிய நாடுகள் ஏற்றுமதித் தடைகளை விதித்துள்ளதுடன் ஏற்றுமதியிலும் குறைப்புச் செய்துள்ளன. ஆனால், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மியன்மார் அரிசியை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்திருந்தது. ஆனால், நீண்டகால அடிப்படையில் தனது சுயதேவையை மியன்மார் பூர்த்தி செய்ய முடியுமாவெனவும் ஏற்றுமதியை தொடர முடியுமாவென்றும் கேள்வி எழுந்திருக்கிறது.
இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளால் தமது சுயதேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அரிசியை இந்த வருடம் உற்பத்தி செய்யாததால் அரிசியை இறக்குமதி செய்ய மியன்மாரை நாடியிருந்தன.
உலக உணவு விலை அதிகரிப்பால் இலங்கையிலும் அரிசியின் விலை 55 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.