பாகிஸ்தானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அந்நாட்டு கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் தாரிக் மஜீத்தையும் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஷ் கியானியையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் சென்றிருந்தார்.
ஜெனரல் தாரிக் மஜீத்துடனான சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா ஆராய்ந்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது பாகிஸ்தானும் இலங்கையும் பிராந்திய சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியில் மிகச் சிறப்பான உறவு முறையையும் பரஸ்பர நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக ஜெனரல் தாரிக் மஜீத் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை இராணுவத்தின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான வகையில் இராணுவப் பயிற்சிகளையும் பொது அக்கறை தொடர்பான வேறு விடயங்களில் உதவிகளையும் வழங்க பாகிஸ்தான் தயாராயிருப்பதாகவும் கூறினார்.
இந்தச் சந்திப்பையடுத்து ஜெனரல் சரத் பொன்சேகா பாகிஸ்தான் இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று அந்நாட்டு இராணுவத்தளபதி ஜெனரல் பர்வேஷ் கியானியைச் சந்தித்தார்.
இதன் போது ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் படையினர் எதிர் நோக்கும் தேவைகள் குறித்து அந்நாட்டுத் தளபதிக்கும் அங்கு கூடியிருந்த சிரேஷ்ட படை அதிகாரிகளுக்கும் விளக்கமளித்தார்.
இந்தச் சந்திப்புக்கு முன்னர் இலங்கை இராணுவத் தளபதிக்கு அங்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.