ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றக் கூட்டத்தொடரை அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக நேற்றிரவு அரசால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் கடந்த மாதம் 9ஆம் திகதியுடன் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நேற்று 6ஆம் திகதி ஆரம்பமானது.
நேற்றைய தினம் அவசரகாலச் சட்டம் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தை அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக கித்துல்கொட அப்பதவியை ஏற்று 14 நாட்கள் முடிவடைந்து விட்டநிலையில் இதனைத் தொடர்ந்து விவாதிப்பதை தடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி பாராளுமன்றக் கூட்டத்தொடரை அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாகவும் சில தகவல்கள் தெரிவித்தன.