சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்கு எதிரான ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 14 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை படைத்தார் பாகிஸ்தான் வீரர் சொஹைல் தன்வீர். இதுவரையிலான ஐ.பி.எல். போட்டியில் இதுவே சிறந்த பந்து வீச்சாக அமைந்துள்ளது.
தன்வீரின் அபாரமான பந்து வீச்சால் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை கிங்ஸ் அணியை எளிதில் வென்றது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி.
4 ஓவர்கள் பந்து வீசி மெய்டன் ஏதுமில்லாமல் 14 ஓட்டங்களைக் கொடுத்து பார்த்திவ் படேல், ஸ்ரீபன் பிளெமிங், எஸ். வித்யு, அல்பி மோர்கெல். முரளிதரன், நிற்னி ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இடது கை பந்து வீச்சாளர் தன்வீர்.
போட்டிக்குப் பின்னர் தன்வீர் பந்து வீச்சு குறித்து தோனியிடம் நிருபர்கள் கேட்டதற்கு கூறியதாவது;
" சொல்வதற்கு என்ன இருக்கின்றது? கை தட்டி அவரது திறமையை உற்சாகப்படுத்துவதைத் தவிர வேறில்லை. சென்னை வீரர்களின் திறமையை அறிந்து அதற்கேற்ப பந்துகளைப் போட்டு தொடக்கத்திலேயே நெருக்கடியைக் கொடுத்து விட்டார். அதிலிருந்து அணி மீள முடியவில்லை. அதுமாதிரியான ஆட்டத்தை சென்னை வரும் போது தன்வீர் வெளிப்படுத்த மாட்டார் என நம்புகின்றேன்" என்றார்.
ஏன் தன்வீர் மாதிரியான பந்து வீச்சை உங்கள் அணியால் வெளிப்படுத்த முடியவில்லை எனக் கேட்டதற்கு, துடுப்பாட்ட வீரர்கள் போதுமான ஓட்டங்களைக் குவிக்கத் தவறிய போது பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க நான் விரும்பவில்லை. பந்து வீச்சாளர்களின் திறமையை நான் அறிவேன் என்றார் தோனி.