வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தெரிவிற்கான ஜனநாயகக் கட்சி சார்பில் வடகரோலினா மற்றும் இன்டியானா மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட வாக்கெடுப்புக்களில் வடகரோலினாவில் செனட்டர் பராக் ஒபாமா அபார வெற்றி பெற்றுள்ள அதேவேளை இன்டியானாவில் செனட்டர் ஹிலாரி கிளின்டன் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான தெரிவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட இம் மாநிலங்களில் வடகரோலினாவில் பெற்ற வெற்றியின் மூலம் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பை ஒபாமா நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்டியானாவில் பெற்ற வெற்றி வேட்பாளராக தெரிவாவதற்கான ஹிலாரியின் நம்பிக்கைகளுக்கு புதிய உத்வேகத்தையளித்துள்ளது.
95 வீதமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள வடகரோலினாவில் 57 - 43 வீதம் என்ற ரீதியில் ஒபாமா ஹிலாரியை தோற்கடித்துள்ள அதேவேளை 91 வீதமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள இன்டியானாவில் 2 வீதத்தால் ஒபாமாவை விட ஹிலாரி முன்னிலையில் இருப்பதாக ஆரம்பக்கட்ட தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இரு வேட்பாளர்களும் ஒருவருக்கொருவர் பலத்த தோல்விகளை ஏற்படுத்தாத போதிலும் பேராளர்களின் எண்ணிக்கையில் ஒபாமா அசைக்க முடியாதளவுக்கு முன்னிலையில் உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இன்டியானாவில் தனது வெற்றியை ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொண்ட ஹிலாரி வெள்ளை மாளிகைக்கான போட்டி முழு வேகமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் பேராளர்களின் எண்ணிக்கையில் ஒபாமாவை முந்துவதற்கு ஹிலாரி எடுத்த முயற்சிகள் யாவும் இம் மாநிலத் தேர்தல் முடிவுகளில் படுதோல்வியடைந்துள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
வேட்பாளரை தெரிவு செய்வதற்கான பேராளர்களின் எண்ணிக்கையில் வடகரோலினாவும் இன்டியானாவும் 187 பேராளர்களைக் கொண்ட மாநிலங்களாகும்.
மேலும் மொத்தம் 217 போராளர்களைக் கொண்ட மாநிலங்களுக்கான வாக்கெடுப்புக்கள் நடைபெறவுள்ள நிலையில் அடுத்தவாரம் மேற்கு வேர்ஜினியாவில் இவ் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள வேட்பாளர் தெரிவுக்காக 2025 பேராளர் களை வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் தற்போது ஒபாமா 1746 பேராளர்களையும் ஹிலாரி 1611 பேராளர்களையும் பெற்றுள்ளனர். ஆனால், 2025 பேராளர்களை எந்தவொரு வேட்பாளரும் பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் வேட்பாளர் தெரிவு சுமார் 800 விசேட பேராளர்களின் முடிவுக்கு விடப்படுமென்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்ட தேர்தல்கள் மேற்கு வோர்ஜினியா, ஒரிகென், கென்டக்கி, பியோடோ றிகோ, மொன்டானா மற்றும் தென் டகொடா ஆகிய மாநிலங்களில் நடைபெறவள்ளன.