*எச்சரிக்கிறது ஐ.தே.க.
ரொஷான் நாகலிங்கம் மக்கள் வறுமையில் வாடுகின்ற நிலையில் தேர்தலின் பின்னர் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க தெரிவித்ததுடன் இதற்கு அரசின் நிர்வாக சீரின்மையும் ஊழல், மோசடிகளுமே காரணமெனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.தே.க.நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
இன்று சகலரின் கவனமும் கிழக்கு நோக்கிக் திரும்பியுள்ளது. நாட்டு மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வினால் வறுமையில் வாடுகின்ற நிலையில் அமைச்சர்கள் கிழக்கு மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு அங்கு குவிந்துள்ளனர்.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை உயர்வடைந்துள்ளதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு டீசலுக்கு 45 ரூபாவாலும் மண்ணெண்ணெய்க்கு ரூபா 35 விலும் நட்டமடைவதனால் எரிபொருட்களின் விலைகளை மீள பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசந்த மெல் தெரிவித்தார்.
பொருட்களின் விலையதிகரிப்புக்கு ஏற்ப சமுர்த்திக் கொடுப்பனவு மற்றும் சம்பளங்களை அரசு அதிகரிக்காத நிலையில் பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்தனால் மக்கள் வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
வங்கியொன்றில் 50 மில்லியன் ரூபா விவசாயக் கடனாக 8% வட்டியில் பெறப்பட்டுள்ளது. அதுபோல் உரம் 350 ரூபாவுக்கு வழங்கப்படுவதாக அரசு கூறுகின்ற நிலையில், உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக தெரியவில்லை. உற்பத்தி அதிகரிக்காததால் இன்று அரிசிக்கு தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டிருக்கின்றது.
கிழக்கு தேர்தல் பிரசாரத்துக்காக அரச வளங்களை அரசு பயன்படுத்துகின்றது. இவ்வாறு ஒவ்வொரு அரச நிறுவனங்களில் ஏற்பட்ட ஊழல் மோசடிகளாலேயே இன்று அதிகளவான கடனை பெறுவதனால் வட்டிக்காக பெருமளவு தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
மக்களின் எந்தப் பிரச்சினையையும் மறந்து செயற்படும் அரசு கிழக்கில் தேர்தல் கொள்ளையில் ஈடுபடுவதற்காக பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கின்றது. ஐ.தே.க.வின் தலைவர் மறைந்த டி.எஸ்.சேனநாயக்காவே கிழக்கை அபிவிருத்தி செய்ய கிழக்கின் உதயத்தைக் கொண்டு வந்தார்.
தற்போது அப்பெயர் பயன்படுத்தப்படுகின்றது. மட்டக்களப்பிலேயே அதிகளவான தேர்தல் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்ததாக திருமலையும் அம்பாறையும் உள்ளது. இதுவரை ஐ.தே.க.வுக்கு எதிராக 51 முறைப்பாடும் ஜே.வி.பி.மற்றும் மக்கள் முன்னணிக்கு எதிராக முறையே 21,3 வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
இத்தேர்தல் நியாயமானதாக நடக்க வேண்டுமாயின் ஆயுதக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமெனக் கூறிய போதிலும் அரசு அவர்களது பாதுகாப்புக்கே பயன்படுத்துவதாகக் கூறுகின்றது.
அப்படியாயின் அங்கு வாழும் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆயுதம் வழங்கப்படவேண்டும். கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த ஆயுதங்களுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதை நிரூபிக்குமாறு கோரிய நிலையில் வாழைச்சேனை, செங்கலடி, களுவாஞ்சிக்குடி பகுதியில் இதனை அவர்கள் மேற்கொள்வதாக நாம் நிரூபித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2005 நவம்பரின் பின் இரண்டாவது முறையாக மோசடியாக இத்தேர்தலில் இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. புலிகளுடன் ஒப்பந்தம் செய்து தேர்தலில் போட்டியிடுவதாக அரசாங்கம் கூறியுள்ள நிலையில் இதனை அவர்கள் நிரூபிக்கட்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலேயே புலிகளுடன் ஒப்பந்தம் செய்து 150 கோடி கைமாற்றப்பட்டதாக மங்கள சமரவீர கூறிய போதிலும் இது குறித்து அரசாங்கம் மௌனம் காத்தே வருகின்றது. மக்களுக்கு முதலில் உண்மையை தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு தெரியும் எது உண்மை எது பொய் என்று? எமக்கே மக்கள் வாக்களிப்பர் என்றார்.