பிரித்தானியாவின் பிரதான சங்கநாயக்கவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அங்குள்ள பௌத்த விகாரை அதிபதி போகொட ஸ்ரீசிலவ்மல நாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வின் போது ஜனாதிபதி உரையாற்றுகையில் கூறியதாவது;
மத அனுஷ்டானங்களுடன் சமுதாய விடயங்களிலும் அக்கறையுடன் செயற்படும் கௌரவத்துக்குரிய போகொட சிலவ்மல நாயக்கவின் சேவை காலத்தின் தேவையாகும்.
இலங்கையர்கள் என்ற வகையில் உலகத்திற்கு எம்மால் கொடுக்கக் கூடிய உயரிய விடயம் தேரவாத பௌத்தமதமாகும். 2550 வருட வரலாற்றைக் கொண்ட எமது பௌத்த சாசனத்தை பாதுகாத்து எதிர்காலத்துக்குக் கொண்டு செல்வது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.
பிரித்தானியாவின் பௌத்த விகாரையின் அதிபதியாக இருந்த கௌரவத்துக்குரிய கலாநிதி மதகம ஸ்ரீ வஜிரஞ்ஞன நாயக்க மரணமடைந்ததையடுத்தே மல்வது மஹா விகாரை அதிபதிகளினால் போகொட சிலவ்மல நாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழக பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தின தேரர், அளுத்கம தம்மானந்த தேரர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகம உட்பட பலர் கலந்து கொண்டனர்.