*ஜனாதிபதி ராஜபக்ஷவால் தமிழரின் ஆத்ம கௌரவத்தை பாதுகாக்கமுடியுமா? ரணில் கேள்வி?
தேர்தலில் வெற்றியடைந்தாலும் தோல்வியைத் தழுவினாலும் எனது ஒரே நிலைப்பாடு தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதேயாகும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களின் ஆத்மகௌரவத்தை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவால் பாதுகாக்க முடியுமாவென்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்மாந்துறையில் திங்கட்கிழமை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது;
நான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருவதைத் தடுப்பதற்கு பிள்ளையான் முயற்சி செய்தார். நான் முன்பு மட்டக்களப்பிற்கு வரும் போது பிள்ளையான் பிறந்து கூட இருக்கவில்லை. அவரைப்பற்றி நாங்கள் சிந்திக்கக்கூட இல்லை. நாங்கள் முன்பு மட்டக்களப்பிற்கு வந்து வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலைக்கு சொந்தமான வீடுகளிலேயே தங்கினோம். இன்று காணப்படும் விடுதிகள் அன்று இருக்கவில்லை. மாங்கேணி மரமுந்திரிகை வீடுகளில் தங்கினோம். அங்கு தங்கியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் கடலிற்கு குளிக்கச் சென்று திரும்புவதற்கு முன் அந்த வீட்டை தீயிட்டனர். இதைச் செய்தது த.ம.வி.பு. அல்ல. ஏனெனில் அவர் அந்தச்சமயம் பாலர் பாடசாலையிலே கல்வி கற்றுக்கொண்டிருந்தார். குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அந்த வீடு தீப்பிடித்தது.
நாங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு வந்ததன் பிரதான நோக்கம் உல்லாசவிடுதி அமைப்பதற்காகும். அச்சமயம் இப்பகுதியில் கணேசன் மற்றும் கனகசபைக்கு அதிகளவான காணிகள் இருந்தன. சிலருக்கு அது ஞாபகம் இருக்கும். அதேபோன்று எஸ்.பி.ஜோன் மற்றும் ஆம்ஸ்ட்ரோங் குடும்பத்தினருக்கும் காணப்பட்டது. இதனால் நாம் பாசிக்குடாவில் ஒரு காணியை வாங்கி ஒரு உல்லாசவிடுதியை அமைத்தோம். அந்த விடுதிக்கு பின்னால் தான் பிள்ளையானின் தந்தை குடியிருந்தார்.
வாழைச்சேனையிலிருந்து கல்குடாவிற்கு செல்லும் வழியில் ஒரு புறம் அந்த விடுதியும் மறுபுறமாக பேசாலைக்கு செல்லும் வீதியும் காணப்பட்டது. பிள்ளையானின் தந்தை சிவனேசத்துரை அக்காலகட்டதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவு வழங்குபவராக இருந்தார். இதனை நான் அமைச்சர் நல்லையா மூலமே தெரிந்துகொண்டேன். ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் டி.எஸ்.சேனாநாயக்காவின் ஆட்சியின் போது நல்லையா ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவே இருந்தார். அமைச்சர் நல்லையாவுக்கு சிவகுமாரன், சூரியகுமாரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஒரே வகுப்பில் என்னுடன் றோயல் கல்லூரியில் கல்வி கற்றனர். அநுர பண்டாரநாயக்கவும் தினேஸ் குணவர்தனவும் எங்கள் வகுப்பில் கல்வி கற்றனர். சசிதரன் எனது வகுப்பில் இருக்கவில்லை. காரணம் அவர் என்னைவிட இளமையானவர் என்பதால் அதே போன்று ரவூப்ஹக்கீமும் என்னுடன் இருக்கவில்லை இளமையானவர் என்பதால்.
1965 ஆம் ஆண்டே தேவநாயகத்தை நான் அறிந்து கொண்டேன். அதே போன்று பரீட்மீராலெப்பையும் நானும் ஒன்றாகத்தான் 1977 பாராளுமன்றத்திற்குச் சென்றோம். இராசதுரையையும் நான் நன்கு அறிவேன். அன்றிலிருந்து நான் இங்கு வந்து போவதால் இங்குள்ள மக்களை எனக்கு நன்றாகத் தெரியும். வழக்கறிஞரான சாம் தம்பி முத்துவையும் நன்கு தெரியும். ஜோசப் பரராஜசிங்கம் எனது தந்தையின் உற்ற நண்பர். ஜெகன் கூறுகிறார் அவரது தந்தை எனது தந்தையை நன்றாக அறிந்திருந்தார் என்று, இங்கு வந்து சுத்தித்திரிந்து புனானை பகுதிகளுக்கும் யானை பார்க்கச் செல்வோம். ஒரு முறை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா அங்கு எங்களை கூட்டிச் சென்று 110 யானைகளை காட்டினார். அவர் அச்சந்தர்ப்பத்தில் கூறினார் இது என்ன யானை என்னிடம் 140 யானைகள் பாராளுமன்றத்தில் இருக்கின்றன என என்னைப்பார்த்துக் கூறினார். வாகரை, கிரான், வாகனேரி குளம் பார்க்கவும் செல்வோம். ஆனால் தொப்பிகலவிற்கு மாத்திரம் செல்லவில்லை. அப்படித்தான் இந்த பிரதேசத்தை நான் அறிந்து கொண்டேன்.
வந்தாறுமூலை வித்தியாலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு தேவநாயகத்திற்கு நான் உதவி செய்துள்ளேன். வெருகல் பிரதேசத்திற்கும் நான் சென்றுள்ளேன். அச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டம் சம்பந்தமாக ஒரு கடிதம் வாசிக்கக் கிடைத்தது. அதில் மட்டக்களப்பு, மன்னார் சம்பந்தமாகவும் மட்டக்களப்பு இராசதானிகள் சம்பந்தமாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அது 2500 வருடங்கள் பழைமை வாய்ந்ததாகும்.
பண்டுகாபய அரசன் பண்டுவஸ்நுவரயிலிருந்து தப்பியோடி இங்கு வந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு மஹியங்கனை ஆட்சியாளரும் முக்குவ இராசதானியர்களும் உதவிசெய்தனர். அதன் பிறகு திம்புலாகலையில் தான் பண்டுகாபய அரசர் அப்போது தங்கினார். இவர்களது உதவிகளை அரசன் பெற்றுக்கொண்டுதான் அனுராதபுரத்தைக் கைப்பற்றி அரசனனான்.
இங்கு காணப்பட்ட யுத்தங்களைப் பற்றி நான் வாசித்திருந்தேன். சத்ருக்கொண்டான் என்ற பிரதேசத்தையும் பார்க்க வேண்டி ஏற்பட்டது. வெருகல் பிரதேசத்திற்கும் சென்று பார்த்தோம். அது தோல்வியுற்றவர்கள் வசிக்கும் கிராமமாகக் காணப்பட்டது. வெற்றிபெற்றவர்கள் அதற்கான சந்தோசத்தைக் கொண்டாட வந்தாறுமூலையையே தேர்ந்தெடுத்தனர்.
அமைச்சர் தேவநாயகம் இதனை கருத்திற் கொண்டு வந்தாறுமூலையில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமெனக் கூறியபோது, கல்வி அமைச்சின் அதிகாரிகள் அதனை எதிர்த்தினர். வந்தாறுமூலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமெனக் கூறி அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தை சித்தாண்டியில் அமைக்குமாறு கூறினர். ஆயினும் அமைச்சர் வந்தாறுமூலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தை அமைத்துவிட்டு மத்திய மகா வித்தியாலயத்தை சித்தாண்டியில் அமைப்பதற்குத் தீர்மானித்தார். இவ்வாறான ஒரு வரலாற்றை அறிந்த என்னை மட்டக்களப்பிற்கு வருவதைத் தடுக்க பிள்ளையானால் முடியுமா?
அதனால் தான் நாங்கள் இங்கு வந்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். இதற்கான காரணம் இந்தத் தேர்தலானது மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாகும். இது முழு நாட்டிற்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். துப்பாக்கிகளுக்கு தலைகுனியாது சுதந்திரமானதும் நீதியானதுமானதொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
முன்பு இங்கு மட்டக்களப்பு நகர சபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் நாங்கள் போட்டியிடத் தீர்மானித்திருந்தோம். எங்கள் உறுப்பினர்களை பலவந்தமாக த.ம.வி.பு. கட்சி இணைத்திருந்தனர். அதனை கருத்திற்கொண்டு நாங்களும் வேறு கட்சிகளும் ஒன்றிணைந்து இத்தேர்தலில் போட்டியிடுவதாயின் பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையாளர் அதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியபோதும் அரசாங்கம் அதற்கு இடமளிக்கவில்லை. இது ஒரு மோசடியான தேர்தல் என்பதால் இதில் போட்டியிடாமல் தவிர்த்து உலகிற்கு உண்மை நிலைமையை காட்டுவதற்கு எண்ணினோம். நடந்து முடிந்த தேர்தல் சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல் அல்ல என்பதை உலகம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலிலும் அவ்வாறே மக்களை அச்சுறுத்தி தமிழ் மக்களின் வாக்குகளையும் முஸ்லிம் மக்களது வாக்குகளையும் சூறையாடி வெல்லப் போகின்றார்கள் என்ற தகவல் கிடைத்தது. இதனால் இதற்கு இடமளிக்கக் கூடாதென எண்ணி உடனே தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம். பிள்ளையான் குழுவின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென எண்ணினோம். விஷேடமாக தமிழ் மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தோம். இதனாலேயே அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கியப்பட்டு இத்தேர்தலில் போட்டியிட முன்வந்தோம். இத்தேர்தலில் மிகவும் திறமை வாய்ந்த, மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்துள்ள மக்கள் சேவகர்களை களமிறக்கி இருக்கிறோம். அதன் பிரகாரம் ஐக்கிய தேசியக்கட்சி மாவட்ட அமைப்பாளர் சசிதரன், ஆறுமுகம் ஜெகன், அமீர்தீன் வெள்ளத்தம்பி, கதிர்காமத் தம்பி கிருபா நந்தசிவம், கனகராஜா தம்பி முத்து மாசிலாமணி, பூபாலரத்னம் காசிபதி, சங்கரப்பிள்ளை நாகலிங்கம் ஆகியோர் இருக்கின்றனர்.
அதே போன்று பசீர் சேகுதாவூத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்துவிட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து மக்களுக்கு சேவை செய்ய இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். அதேபோன்று அஸ்வர் மொஹமட் இப்ராஹிம் லெப்பே மொஹமட், அஹமட் லெப்பை அமாஹம்டம் மர்சூக், மொஹமட் நூறுல்முபீன், சேஹுஇஸ்மாயில், மொஹமட்புர்கான் ஆகியோரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் எங்களை வெற்றியடையச் செய்ய லத்தீப் அவர்கள் வழங்கும் உதவிகளை எங்களால் மறந்துவிட முடியாது.
இந்தத் தேர்தலை பாதுகாக்கவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம். இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல. நாளுக்கு நாள் எழும் பிரச்சினைகளைத் தீர்க்கும் தேர்தல் அல்ல. எவ்வாறான பிரச்சினைகள் வந்தாலும் அதனை தீர்க்கும் திராணி அரசாங்கத்துக்கு இல்லை. கிழக்கின் உதயத்திற்கும் அரசாங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. பொய் பிரசாரங்கள் மூலமே மக்களை ஏமாற்ற அரசாங்கம் முனைகின்றது. மக்கள் இதனை நன்கு அறிந்துகொண்டுள்ளனர்.
நான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட பொழுது கிழக்கு அபிவிருத்திக்கு கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டுதான் செயற்படுகின்றனர். கிழக்கில் மனித உரிமை மீறல், ஆட்கடத்தல் சம்பவங்கள், கொலைகள், கொள்ளைகள், கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதனாலும் அரசாங்கம் பிள்ளையான் குழுவுடன் சேர்ந்து செயற்படுவதனாலும் உலக நாடுகள் இந்த அரசாங்கத்திற்கு உதவி வழங்க முன்வருவதில்லை. எஞ்சியுள்ள பணத்தை வைத்துக்கொண்டே இந்த மின்சாரக்கம்பங்களை போடுகின்றனர். அரசு மேற்கொள்ளும் திட்டத்துக்கான பாரிய தொகையின் மீதியை யார் வழங்கப்போகிறார்கள் என்று அவர்கள் கூறுவதில்லை.
பசில் ராஜபக்ஷ மகாவலி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கப் போவதாகத் தற்போது கூறுகின்றார். மகாவலி செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதாயின் ஏ வலயத்தின் அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பிக்க வேண்டும். அதனை செயற்படுத்துவதாயின் அங்கு நீர் தேவை. தற்போது மகாவலியில் நீர் தட்டுப்பாடும் காணப்படுகிறது. டீ.சி.வலயங்களிலும் இப்பிரச்சினை காணப்படுகிறது. சில பிரதேசங்களுக்கு சிறு போகத்திற்கும் சரி பெரும் போகத்திற்கும் சரி முறையாக நீர் வழங்கப்படுவதில்லை.
ஏ.வலயத்தை விருத்தி செய்வதாயின் உமா ஓயாத் திட்டத்தை முன்னெடுத்து அதனூடாகவே இங்கு நீரைக் கொண்டு செல்ல வேண்டும். உமா ஓயாத் திட்டத்தின் மூலம் ஹம்பாந்தோட்ட பகுதிக்கு நீரைக் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதால் எவ்வாறு எங்கிருந்து ஏ வலயத்திற்கு நீரைக் கொண்டு வருவீர்களென நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வின் மூலமாக ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் இதற்கு மிகவும் முக்கியமாகும். இந்நாட்டில் உள்ள அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். இந்நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒரு போதும் தீர்வாக அமையாது. இதனை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கக் வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே நான் முனைப்புடன் தொடர்ந்தும் செயற்படுகிறேன்.
தேர்தல்களில் நான் வெற்றியடைந்த சந்தர்ப்பமாயினும் சரி தோல்வியடைந்த சந்தர்ப்பமாயினும் சரி எச்சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே காணப்பட வேண்டும் என்ற நோக்குடனேயே நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.
நான் பேசுவது சிங்களத்தில் என்றாலும் உங்களுடன் இதய சுத்தியுடனேயே பேசுகிறேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் தொடர்ந்தும் இருக்கிறேன்.