சமாதானமே இன்றைய முக்கியத் தேவை. சகல இனத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும். கிழக்கிலுள்ள மக்களை ஒவ்வொரு இனமாகவும், ஒவ்வொரு குழுவாகவும் பிரிப்பதற்கு நான் இடமளிக்க மாட்டேன். மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர். இந்த பக்கம் முஸ்லிம் இந்தப் பக்கம் தமிழ் என்று எனக்கு கோடு போட்டுக் காட்ட முடியாது. அனைவரும் கலந்து வாழ்கின்றனர். அதேபோன்று ஒரு சில சிங்களக் கிராமங்களும் காணப்படுகின்றன. இவ்வாறு வாழும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு இதனைப் பிரிப்பது?
மட்டக்களப்பை பொறுத்தவரை முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஐக்கியப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே போன்று முஸ்லிம் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இரு பாலாரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
கிழக்கில் ஏனைய மாவட்டங்களில் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். அவர்களது உரிமைகளும் அதே போன்று பாதுகாக்கப்பட்டு சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். மக்களை இன, குல, மத ரீதியாகப் பிரிவினைபடுத்தக் கூடாது.
சுயாதீனத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றவர்களே பேச்சுவார்த்தையின் மூலம் கிழக்கின் எதிர்காலத்தைப்பற்றி தீர்மானிக்க வேண்டும். கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் எடுக்கும் தீர்மானமே கிழக்கின் எதிர்காலத்திற்கு வித்திடும். அதற்கு சுதந்திரமான ஒரு சூழல் காணப்பட வேண்டும். இவைகளை கருத்திற் கொண்டே நாம் இத்தேர்தலில் போட்டியிடுகிறோம்.
தமிழ் மக்கள் யுத்தத்தினாலும் கடல்கோளினாலும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். அவர்களை அச்சுறுத்துவது, அவர்களது வாக்குகளை பறிப்பது கூட்டங்களுக்கு செல்வதை தடுப்பது என்பது தீய செயல்களாகும். அது ராஜபக்ஷ அரசாங்கத்தின் இனவாதக் கொள்கையையே காட்டி நிற்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு கிடைக்காது என்று அறிந்ததன் காரணமாகவே பிள்ளையான் குழுவை வைத்து தமிழ் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர்.
இதற்கு நாங்கள் அச்சமின்றி முகம் கொடுப்போம். அவர்கள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்படும், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் அதே போன்று முஸ்லிம் மக்களுக்கும் அநீதி இழைக்கப்படும் என்று கூறுகின்றனர். இங்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை அவர்களால் முன்வைக்க முடியாததனாலேயே இவ்வாறு கூறுகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கையில் அரசியல் தீர்வு சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். இது தற்போது தபாற் கந்தோரில் பல வருடங்களாக முடங்கிக் காணப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை குறைந்தபட்சம் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னராவது அந்தத் தீர்வுத்திட்டத்தை முன்வைக்குமாறு அமைச்சர் திஸ்ஸ விதாரணவை ஏன் கோர முடியாது?
தமிழ் மக்களின் ஆத்ம கௌரவத்தை உங்களால் பாதுகாக்க முடியுமா? என நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்புகிறேன்.
தமிழ் மக்களிடம் கப்பம் அறவிட்டதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கோருமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதனால்தான் நான் பிள்ளையானிடம் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வேண்டுகிறேன். நீங்கள் மனித உரிமைகளை மதிக்கின்றீர்களா. அவ்வாறாயின் நாளையே ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வாருங்கள் உங்களை அரசியலில் இணைத்துக்கொள்ள ஆயத்தமாக இருக்கின்றோம். இவர் இந்த ஆயுதத்தை பாவிப்பது தமிழ் மக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.
பிள்ளையான் பசில் ராஜபக்ஷவின் பொம்மையாகும். பசில் ராஜபக்ஷ தனக்கு தேவையான விதத்தில் அந்த பொம்மையை ஆட்டுகின்றார். இவ்வாறு இருந்துகொண்டு தன்னை முதலமைச்சராக்குமாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். மறு புறமாக ஹிஸ்புல்லா தன்னை முதலமைச்சராக்குமாறு முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுகின்றார். காலம் செல்லுமுன் மட்டக்களப்பு வாவிகளில் உள்ள மீன்களும் சொல்லும் தங்களை முதலமைச்சராக்குமாறு?
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பிள்ளையானிடம் எதுவித தீர்வுத் திட்டமும் இல்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். அரசாங்கம் எழுதிக் கொடுப்பதை மணித்தியாலக் கணக்கில் கூட்டங்களில் வாசிக்கிறார். இதனை விட்டு விட்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முன் வரவும்.
அரசாங்கமும் அமைச்சர் சம்பிக ரணவக்கவும் பிள்ளையானைப் பற்றி என்ன கூறுகின்றனர்? ஜாதிக ஹெல உறுமயவின் உத்தியோகபூர்வ பத்திரிகையிலும் தினமின பத்திரிகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று கருணா அம்மானிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு அவரை புறம் தள்ளியது போன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் பிள்ளையானையும் அரசாங்கம் புறம் தள்ளிவிடும் எனக் கூறுகின்றனர். இது சம்பந்தமாக ஏதாவது பதிலைக் கூறவும்.
ஒரு புறம் பிள்ளையான் கூறுகிறார் தான் முதலமைச்சராகப் போவதாக, மறு புறமாக பிள்ளையானை இரண்டு மாதத்தில் விரட்டிவிடுவோம் என்று கூறுகின்றனர். சத்துருக்கொண்டானில் இராணுவத்தினர் அகப்பட்டது போன்று பிள்ளையானும் அரசாங்கத்தினால் பிடிபடுவார். கடைசியில் பசில் ராஜபக்ஷ வந்தாறுமூலைக்குச் சென்று வெற்றிக் கரகோசமிடுவார். உங்களால் வெருகல் பிரதேசத்திற்காவது தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
எனவே எதுவித அச்சமுமின்றி உங்கள் வாக்குகளை அளியுங்கள். சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கிக் கொள்வதேயாகும்.